நாடு முழுவதும் மேலும் ஒராண்டுக்கு ஃப்ரீ 'ரோமிங்' ... பிஎஸ்என்எல் அறிவிப்பு
டெல்லி: நாடு முழுவதும் இலவச ‘ரோமிங்' வசதியை மேலும் ஓராண்டு காலத்துக்கு நீட்டிப்பு செய்வதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் இலவச 'ரோமிங்' சேவை பிஎஸ்என்எல் கடந்த ஆண்டு அமல்படுத்தியது. இந்த சலுகை ஓராண்டுவரை நடைமுறையில் இருக்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரோமிங் சேவையை மேலும் ஓராண்டு காலத்திற்கு நீட்டிக்க பிஎஸ்என்எல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அதிகமான வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு சேவை இணைப்புக்குள் வந்துள்ளதையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் காரணமாக மேலும் பல வாடிக்கையார்கள் 'நம்பரை மாற்றாமல் நெட்வொர்கை மாற்றும் வசதி' (MNP) மூலம் பிஎஸ்என்எல் நெட்வொர்கில் இணைவார்கள் என அந்நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டிராய் வெளியிட்ட தரவுகளின் படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வளர்ச்சி 1.67% உயர்வடைந்துள்ளது. இதற்கு அடுத்ததாக, 1.18% என்ற வளர்சியில் ஏர்டெல் நிறுவனம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து வோடபோன் நிறுவனம் 1.04% என்ற வளர்சியில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
மார்ச் 31-ந் தேதி வரையில் பிஎஸ்என்எல் நிர்வாகத்திற்கு 8.63 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் உள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.