ராத்திரி 9 மணியில் இருந்து விடிய விடிய இலவசமா பேசலாம்.. பிஎஸ்என்எல் அதிரடி ஆஃபர்
டெல்லி: விடிய விடிய பேசினாலும், இலவசம்தான் என்ற ஆஃபரை அள்ளிக் கொடுத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.
இதுகுறித்து பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிஎஸ்என்எல் லேண்ட் லைனில் இருந்து வேறு எந்த ஒரு லேண்ட் லைன் அல்லது செல்போன்களுக்கும் இரவு 9 மணி முதல் காலை 7 மணிவரை இலவசமாக பேசிக்கொள்ளலாம்.
இந்த ஆஃபர் மே 1ம்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இலவச அழைப்புகளுக்கு கட்டுப்பாடு கிடையாது. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும், குறிப்பிட்ட அந்த காலக்கெடுவிற்குள் இலவசமாக பேசிக்கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பு கூறுகிறது. நகரம், கிராமம், பிராட்பேண்ட் வசதி கொண்ட லேண்ட்லைன் என அனைத்து வகை பிஎஸ்என்எல் லேண்ட் லைன்களுக்கும் இந்த ஆஃபர் பொருந்தும்.
லேண்ட்லைன் மார்க்கெட்டில், ஏர்டெல் மிக வேகமாக முன்னேறி வருவதாக டிராய் அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் தனது பழைய வாடிக்கையாளர்கள் பலத்துடன், இந்திய லேண்ட்லைன் மார்க்கெட்டில், பிஎஸ்என்எல் 62.26 சதவீத பங்குகளை வைத்துள்ளது.
கடந்த பிப்ரவரியில் மட்டும் பிஎஸ்என்எல் 162556 லட்சம் லேண்ட்லைன் வாடிக்கையாளர்களை இழந்தது. தற்போது அதன் லேண்ட்லைன் வாடிக்கையாளர்களாக நாடு முழுவதும் 1.66 கோடி பேர் உள்ளனர். இவர்களை தக்க வைக்க பிஎஸ்என்எல் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.