121 விமான நிலையங்களில் இலவச 'வை-ஃபை' சேவை அளிக்க பி.எஸ்.என்.எல் திட்டம்
டெல்லி: நாடு முழுவதும் உள்ள 121 விமான நிலையங்களில் இலவச வை-ஃபை இண்டர்நெட் சேவையை வழங்க பி.எஸ்.என்.எல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல், 'ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா' நிர்வகித்து வரும் விமான நிலையங்களில் இலவச வை-ஃபை இண்டர்நெட் சேவையை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த தகவலை அந்நிறுவனத்தின் தலைவர் அனுபம் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டில் மட்டும் இந்தியா முழுவதும் 2,500 வை-ஃபை சென்டர்களை அமைக்க பி.எஸ்.என்.எல். திட்டமிட்டுள்ளது. இதுதவிர, 100 வை-ஃபை சென்டர்கள் பேஸ்புக் வசதியுடன் அமைக்கப்படுகிறது. அந்தந்த தொகுதியில் உள்ள எம்.பி.க்களுக்கு வசதியாகவும் இந்த சேவையை வழங்குகிறது.
11 சர்வதேச விமான நிலையங்கள் உள்பட நாடு முழுவதும் 121 விமான நிலையங்களை 'ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா' நிர்வகித்து வருகிறது. இதில், கோவை, போபால் உள்ளிட்ட 5 விமான நிலையங்களில் ஏற்கனவே இலவச வை-ஃபை சேவையை பி.எஸ்.என்.எல் வழங்கி வருகிறது. விரைவில் அனைத்து விமான நிலையங்களுக்கும் இலவச வை-ஃபை இண்டர்நெட் சேவையை விரிவாக்கம் செய்ய உள்ளது.
தற்போது 'ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா' சில விமான நிலையங்களில் வை-ஃபை சேவைகளுக்காக டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தை சார்ந்து இருக்கிறது.