காஷ்மீர்: கிலானிக்கு சட்டவிரோத இணைய இணைப்பு- 2 பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஹூரியத் மாநாடு அமைப்பின் தலைவர் கிலானிக்கு சட்டவிரோதமாக தொலைபேசி மற்றும் இணைய இணைப்பு கொடுத்ததாக 2 பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து செய்யப்படுவதற்கு முன்னதாகவே அனைத்து தகவல் தொடர்புகள், இணையசேவைகள் துண்டிக்கப்பட்டன. அரசியல் கட்சித் தலைவர்களும் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
இதனால் காஷ்மீர் வெளி உலகத்தில் இருந்து துண்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 370-வது பிரிவு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு ரத்து செய்வதாக அறிவித்தது.
ராணுவத்துக்கு எதிராக பொய்செய்தி பரப்புகிறார்...ஷேக்லா ரஷீத் மீது சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு
இதனையடுத்து ஹூரியத் மாநாடு தலைவர் கிலானி தமது ட்விட்டர் பக்கத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவுகளை வெளியிட்டு வந்தார். இதனால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்தது.
ஜம்மு காஷ்மீரில் அனைத்து தகவல் தொடர்பு சேவைகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் கிலானி எப்படி பதிவுகளை வெளியிடுகிறார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. மேலும் கிலானி உள்ளிட்ட 8 பேரின் அக்கவுண்ட்டுகளை முடக்கவும் ட்விட்டர் நிர்வாகத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
இந்த நிலையில்தான் ஆகஸ்ட் 8-ந் தேதி வரை பி.எஸ்.என்.எல். பிராண்ட் பேண்ட் இணைய இணைப்பை கிலானி முழுமையாக பயன்படுத்தியது தெரியவந்தது. கிலானிக்கு இணைய சேவையை செய்து கொடுத்ததாக தற்போது 2 பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.