ராம்தேவின் தலையை கொண்டு வருபவருக்கு ரூ.1 கோடி: மாயாவதி கட்சி தலைவர் அறிவிப்பு
ஜலந்தர்: யோகா குரு பாபா ராம்தேவ் தலையை கொண்டு வருபவருக்கு ரூ. 1 கோடி பரிசு அளிக்கப்படும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் பகவான் சிங் சோஹன் அறிவித்துள்ளார்.
யோகா குரு பாபா ராம்தேவ் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தலித்துகளின் வீடுகளுக்கு தேனிலவு மற்றும் சுற்றுலாவுக்கு செல்வதாக தெரிவித்தார். மேலும் அவர் குரு கோபிந்த் சிங்கின் புகைப்படத்தை அவமதித்ததாக கூறி சீக்கிய ஆர்வலர்கள் அளித்த புகாரின்பேரில் ராம்தேவ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் அருகே ராம்தேவின் உருவ பொம்மையை பகுஜன் சமாஜ் கட்சியினர் எரித்தனர். அப்போது பேசிய ஹோஷியார்பூர் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பகவான் சிங் சோஹன் கூறுகையில்,
ராகுலை பற்றிய ராம்தேவின் கருத்து நாட்டில் உள்ள அனைத்து பெண்களையும் அவமதிப்பது போல் உள்ளது. அவரின் தலையை கொண்டு வருபவருக்கு ரூ. 1 கோடி பரிசு அளிப்பேன். ராம்தேவின் கருத்துக்கு அவரை தூக்கிலிட வேண்டும் என்று எங்கள் கட்சி தலைவர் மாயாவதி ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளார் என்றார்.