மோடி சுனாமியில் மூழ்கிப் போன மாயாவதியின் பகுஜன் சமாஜ்-கிடைத்தது 'முட்டை'!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வெளுத்துக் கட்டிய மோடி சுனாமியில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி முட்டையைத்தான் வாங்க முடிந்திருக்கிறது.
பகுஜன் சமாஜ் கட்சி 1989ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலை எதிர்கொண்டு வருகிறது. அந்த கட்சி நாட்டின் பல மாநிலங்களில் போட்டியிட்டாலும் பொதுவாக உத்தரப்பிரதேசத்தை மையமாக வைத்துதான் அரசியலை நடத்தி வருகிறது.
இம்மாநிலத்தில் ஆட்சியையும் கைப்பற்றி அரசும் நடத்திய கட்சி. தற்போதைய தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாத முட்டை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது பகுஜன். கடந்த லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் 20 தொகுதிகளைக் கைப்பற்றியிருந்தது பகுஜன் சமாஜ்.
2004 ஆம் ஆண்டு தேர்தலில் 19, 1999 தேர்தலில் 14 இடங்களை இம்மாநிலத்தில் கைப்பற்றியிருந்தது அக்கட்சி. தற்போது ஒரு தொகுதியைக் கூட கைப்பற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.