உ.பி.யில் தற்போது தேர்தல் நடைபெற்றால் ஆளும் சமாஜ்வாடி-80; பகுஜன் சமாஜ்- 185; பாஜக 120- ஏபிபி சர்வே
டெல்லி: உத்தரபிரதேச மாநில சட்சபைக்கு தற்போது தேர்தல் நடைபெற்றால் ஆளும் சமாஜ்வாடி கட்சி படுதோல்வி அடைய நேரிடும்; அக்கட்சிக்கு 80 இடங்கள்தான் கிடைக்கும் என்கிறது ஏபிபி செய்தி நிறுவனத்தின் (ABP) கருத்து கணிப்பு. மேலும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 180 இடங்களும் பாஜகவுக்கு 120; காங்கிரஸ்- ஆர்ஜேடி கூட்டணிக்கு 13 இடங்களும் கிடைக்கும் என்கிறது அக்கருத்து கணிப்பு.
உத்தரப்பிரதேச சட்டசபைக்கு 2012-ல் தேர்தல் நடைபெற்றது. அப்போது சமாஜ்வாடி கட்சி 228; பகுஜன் சமாஜ் 80; பாஜக 42; காங்கிரஸ் 29 இடங்களைக் கைப்பற்றியிருந்தன.
மொத்தம் உள்ள 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றுவதில் மிகவும் முனைப்புடன் இருந்து வருகிறது.
ஆளும் சமாஜ்வாடி படுதோல்வி
இந்நிலையில் ஏபிபி செய்தி நிறுவனம், தற்போது உத்தரப்பிரதேச சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றால் முடிவுகள் எப்படி இருக்கும் என ஒரு கருத்து கணிப்பை நடத்தியது. அதில் தெரிவிக்கப்பட்ட முடிவுகள்:
ஆளும் சமாஜ்வாடி- 80
பகுஜன் சமாஜ் - 185
பாரதிய ஜனதா - 120
காங்கிரஸ்- ஆர்ஜேடி - 13
இதர- 5
எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை
அதாவது 2012-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் தலைகீழாக இருக்கும் என்கிறது இக்கருத்து கணிப்பு. அத்துடன் ஆட்சி அமைக்கத் தேவையான 202 இடங்களை எந்த கட்சியும் தற்போதைய நிலையில் பெறாது என்கிறது இக்கருத்து கணிப்பு.
அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி விஸ்வரூபமெடுத்து 120 இடங்களைக் கைப்பற்றும் நிலைக்கு உயரக் கூடுமாம். 2014 லோக்சபா தேர்தலில் மொத்தம் உள்ள 80-ல் 73 தொகுதிகளை பாரதிய ஜனதா கைப்பற்றியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த முதல்வர் மாயாவதி
மாயாவதி - 31%
அகிலேஷ் யாதவ்- 30%
ராஜ்நாத்சிங் - 18%
என வாக்காளர்கள் பதிலளித்துள்ளதாக கூறுகிறது ஏபிபிசி சர்வே.
அகிலேஷ் அரசு எப்படி?
2017 சட்டசபை தேர்தலின் போது வேலைவாய்ப்பின்மை, பணவீக்க விகிதம், ஊழல், ஏழ்மை ஆகியவைதான் பிரதான பிரச்சனைகளாக இருக்கும் என்கிறது இக்கருத்து கணிப்பு.
கடந்த 4 ஆண்டுகால உ.பி. அகிலேஷ் அரசு மிக சிறப்பாக, நன்றாக செயல்படுவதாக 32%; மோசமாக செயல்படுகிறது என 36% பேர் தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம் வாக்காளர்களைப் பொறுத்தவரை அகிலேஷ் அரசு நன்றாக செயல்படுவதாக தெரிவித்திருக்கின்றனர். உத்தரப்பிரதேச மாநில அரசின் சட்டம் ஒழுங்கு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு 60% பேர் மிக மோசம் என கூறியுள்ளனர். ஆனால் 54% முஸ்லிம் வாக்காளர்களோ சட்டம் ஒழுங்கு பரவாயில்லை என கருத்து தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அகிலேஷ் அரசு தடுக்க தவறிவிட்டதாக அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும் மூன்றில் 2 பங்கு வாக்காளர்கள், சமாஜ்வாடி ஆட்சியில் வளர்ச்சி பணிகள் குறித்து அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர்.
மத நல்லிணக்கத்தை உருவாக்குவதில் அகிலேஷ் அரசு மீது சரிபாதி அளவினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஊழலில் முந்தைய பகுஜன் சமாஜ் அரசைக் காட்டிலும் மிக மோசமாக இருக்கிறது அகிலேஷ் அரசு என பெரும்பான்மையினோர் கூறியுள்ளனர்.
மத்திய பாஜக அரசு, மோடிக்கு ஆதரவு
மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சிறப்பாக செயல்படுவதாக 62% பேர் தெரிவித்துள்ளனர். ஆனால் முஸ்லிம் வாக்காளர்களில் சரி பாதியானோர் மத்திய அரசு மீது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் மிகவும் புகழ்பெற்ற தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார். 2-வது இடத்தில் மாயாவதி இருக்கிறார். அவருக்கு அடுத்ததாக உ.பி. முதல்வர் அகிலேஷ் இருந்து இருப்பதாக கூறுகிறது ஏபிபி கருத்து கணிப்பு.