தெரியாமல் போலீசாருக்கே ஃபேஸ்புக்கில் போதைப் பொருள் விற்று கைதான பி.டெக். பட்டதாரி
பெங்களூர்: பெங்களூரில் ஃபேஸ்புக் மூலம் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த 23 வயது என்ஜினியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் எஸ்.ஸ்ரீஹரி. பி.டெக். படித்துள்ளார். பெங்களூரில் வசித்து வருகிறார். ஃபேஸ்புக் மூலம் போதைப் பொருள் விற்பனை செய்து வந்துள்ளார். ஃபேஸ்புக்கில் உள்ள பெங்களூர் வீட் ஸ்மோக்கி பக்கத்தில் தனது செல்போன் எண்ணை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் போலீசார் அந்த பக்கத்தில் ஸ்ரீஹரியிடம் எங்கு போதைப் பொருள் வாங்குவது என்று கேட்டனர். அதற்கு ஸ்ரீஹரி தனது செல்போன் எண்ணை அளித்து தன்னை தொடர்பு கொள்ளுமாறு கூறினார். இதையடுத்து போலீசார் ஸ்ரீஹரியை தொடர்பு கொண்டு போதைப்பொருள் வேண்டும் என்று கேட்டனர்.
ஸ்ரீஹரி தன்னிடம் போதைப்பொருள் கேட்பது போலீசார் என்று தெரியாமல் அவர்களை காடுகோடிக்கு வருமாறு கூறினார். அந்த இடத்திற்கு வந்த ஸ்ரீஹரியை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீஹரி தங்கியிருந்த வீட்டில் இருந்து 5 கிலோ போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ஸ்ரீஹரிக்கு போதைப்பொருளை சப்ளை செய்து வந்த அர்ஜுன்(25) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக கடந்த மாதம் தான் ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த என்ஜினியர் ஒருவர் ஃபேஸ்புக் மூலம் போதைப்பொருளை விற்பனை செய்து கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.