உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டம்.. அறிவிப்பு என்னவோ அட்டகாசம்.. அதற்குள் இருப்பதோ ஆயிரம் ஓட்டைகள்!
டெல்லி: உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீடு திட்டம் என்ற மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியின் அடைமொழியோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ள 10 கோடி குடும்பங்களுக்கான திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன.
10 கோடி குடும்பங்களுக்கு, ஆண்டுக்கு, தலா 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் காப்பீடு திட்டம் கொண்டுவரப்படும் என பட்ஜெட்டில் ஜேட்லி அறிவித்தார்.
அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு வகையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, இந்த காப்பீடு திட்டம் உதவிகரமாக இருக்கும்.
ரூ.5 லட்சம் வரை
அதிகபட்சமாக 5 லட்சம் வரையில் அவர்கள் மருத்துவ செலவீனங்களை இந்த காப்பீடு திட்டத்தின்மூலம் நிறைவேற்றிக்கொள்ளலாம், ஏழை எளியவர்களுக்கு இதனால் பலன் கிடைக்கும்.. இப்படி நீண்டுகொண்டே போகிறது இந்த திட்டம் குறித்த புகழுரைகள். ஆனால், நிஜத்தில் இது எப்படி சாத்தியப்படும்? சுவிஸ் வங்கியிலிருந்து கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும், தலா ரூ.15 லட்சம் ரூபாய் செலுத்துவதாக கூறிய அதே மாதிரியான ஒரு கவர்ச்சி அறிவிப்புதானா இதுவும்?
மருத்துவ கட்டமைப்பு
இந்த சந்தேகங்கள் எல்லாம் ஏன் வருகின்றன என்பதற்கு சில அடிப்படை காரணங்கள் உள்ளன. அதில் முதலாவது, நமது நாட்டின் மருத்துவ அடிப்படை கட்டமைப்பு. தென் இந்தியர்கள் பலருக்கும் மருத்துவ சேவை கிடைக்காத மக்கள் அறிமுகம் குறைவாக இருக்கலாம், ஆனால் வட இந்தியா இன்னும் இந்த விஷயத்தில் முன்னேறவில்லை. டாக்டர்கள் மற்றும் நோயாளிகள் நடுவேயான விகிதாச்சாரம் என்பது அங்கெல்லாம் மிக அதிகம்.
மருத்துவமனைகள் இல்லை
தனியார் மருத்துவமனைகளில், மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டம் ஏற்கப்படும் என்ற வகையில்தான் திட்டம் வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கலாம். ஆனால், அந்த அளவுக்கு வசதி கொண்ட தனியார் மருத்துவமனைகள் எண்ணிக்கை மிக குறைவு. எனவே மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழியுமே தவிர உடனுக்குடன் சிகிச்சையளிக்க முடியாது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த ஏழை எளியவர்கள், நவீன தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவது நல்லதுதான் என்றபோதிலும், அதற்கான கட்டமைப்பை உருவாக்காமல் எப்படி சிகிச்சை அளிக்க முடியும் என்பதே கேள்வி. கூட்டம் அதிகரித்தால் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெற வந்தவர்களை தனியார் மருத்துவமனைகள் இரண்டாம் தரமாக நடத்த வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது.
பணத்திற்கு என்ன செய்வார்கள்?
மேலும், 10 கோடி குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் என்றால், அதன் மதிப்பு ரூ..50000000000000 ஆகும். இவ்வளவு பெரிய தொகையை திரட்டுவதற்கான நிதி ஆதாரம் எது என பட்ஜெட்டில் குறிப்பிடவில்லை. காப்பீடு தொகையில் தனி நபர்கள் கணிசமாக பணம் செலுத்த வேண்டி வருமா, முதலில் பணம் செலுத்துவிட்டு பிறகு அரசிடமிருந்து திரும்ப பெற வேண்டுமா அல்லது கேஷ்லெஸ் வசதி கொண்டதா என்ற தகவலும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. 2016ம் ஆண்டிலேயே இத்திட்டம் அறிவிக்கப்பட்டு மீண்டும் இந்த பட்ஜெட்டிலும் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு காரணம் இதுபோன்ற நடைமுறை சிக்கல்கள்தான் என கூறப்படுகிறது.