வியர்க்க வைக்கும் பட்ஜெட்... கோடை நெருங்கும் வேளையில் ஃபிரிட்ஜ் விலை உயரப் போகுது!
டெல்லி: குளிர்சாதனப் பெட்டியின் உதிரி பாகங்கள் உற்பத்தி வரி 5-ல் இருந்து 6 சதவீதமாக பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் குளிர்சாதனப் பெட்டியின் விலை கணிசமாக உயரும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
2016-17-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த 3வது பட்ஜெட் இதுவாகும்.
உலகப் பொருளாதாரம் மந்தமான நிலையில் உள்ளபோது இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக கூறிய ஜேட்லி, ஆனபோதும் இந்தியா வளர்ச்சி போக்கில் உள்ளது என்றார்.
தனது பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களை அறிவித்த ஜெட்லி, பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு அறிவிப்பையும் வெளியிட்டார்.
அதில் ஒன்று தான், குளிர்சாதனப் பெட்டியின் உதிரி பாகங்கள் உற்பத்தி வரி 5-ல் இருந்து 6 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. இந்த வரி உயர்வால் தன்னிச்சையாக குளிர்சாதனப் பெட்டிகளின் விலை கணிசமாக உயரும் வாய்ப்புள்ளது என ஜெட்லி தெரிவித்துள்ளார்.
வரலாறு காணாத அளவாக கடந்தாண்டு கோடையில் இந்தியாவில் வெப்பம் பதிவானது. இந்தாண்டு அதை விட கூடுதலாக சூரியன் தீயாக வேலை செய்யும் என விஞ்ஞானிகள் மிரட்டி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் குளிர்சாதனப் பெட்டியின் விலை உயரலாம் என அறிவிப்பு, புதிதாக குளிர்சாதனப் பெட்டி வாங்கலாம் என திட்டமிட்டிருப்பவர்களின் தலையில் இடியாக இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.