மத்திய பட்ஜெட்: தங்கம், வைர நகைகள் விலை மேலும் உயரப் போகுது!
டெல்லி: வெள்ளியை தவிர மற்ற நகைகளுக்கு கலால் வரி 1 சதவீதம் உயர்வு என பட்ஜெட்டில் அருண்ஜேட்லி அறிவித்துள்ளதால், தங்கம், வைரம் உள்ளிட்ட விலையுயர்ந்த நகைகளின் விலை மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று 2016-17-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். உலகப் பொருளாதாரம் மந்தமான நிலையில் உள்ளபோது இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக கூறிய ஜேட்லி, ஆனபோதும் இந்தியா வளர்ச்சி போக்கில் உள்ளது என்றார்.
மேலும், இந்த பட்ஜெட் எதிரொலியாக பல்வேறு பொருட்களின் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. கார், புகையிலைப் பொருட்கள், குளிர்சாதனப் பெட்டி போன்றவற்றின் விலை அதிகரிக்கும் எனத் தெரிகிறது. அந்தவகையில், தங்க நகை விலையும் உயர இருக்கிறது.
இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வெள்ளியை தவிர மற்ற நகைகளுக்கு கலால் வரி 1 சதவீதம் உயர்வு என அருண்ஜேட்லி அறிவித்துள்ளார். இதனால், தங்கம், வைரம், பிளாட்டினம் உள்ளிட்ட விலையுயர்ந்த ஆபரணங்களின் விலை அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
ஏற்கனவே, தங்கம் விலை வரலாறு காணாத அளவாக உயர்ந்து வருகிறது. இந்தச் சூழலில் கலால் வரியும் உயர்த்தப்பட்டிருப்பதால் தங்க நகைகள் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்கும்.
இதேபோல், ஆயத்த ஆடைகளுக்கான கலால் வரியும் ஒரு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.