பட்ஜெட்டில் ரயில்வே பாதுகாப்புக்கு முக்கியத்துவம்... தமிழகத்திற்கு ஏமாற்றம்
நாடாளுமன்றத்தில் இன்று தாக்கலான பட்ஜெட்டில் ரயில்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி புதன்கிழமை பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டையும் இணைத்து முதல் முறையாக ஒருங்கிணைந்த பட்ஜெட் ஆக தாக்கல் செய்தார்.
ரயில்வே பட்ஜெட்டில் ரயில்களின் பாதுகாப்பு, பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் சுமார் 92 ஆண்டு காலமாக மத்திய பொது பட்ஜெட் தனியாகவும், ரயில்வே பட்ஜெட் தனியாகவும் தாக்கல் செய்யப்படுவதே வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில், அரசின் சீர்திருத்த செயல்திட்டத்தின்படி இம்முறை இரண்டு பட்ஜெட்களும் நாடாளுமன்றத்தில் இணைத்து தாக்கல் செய்யப்பட்டது.
அருண் ஜெட்லி தாக்கல் செய்த புதிய பட்ஜெட்டில் ரயில்வே நிர்வாகத்தின் நிதிநிலைமை, திட்டங்கள் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு அதிக அளவில் ரயில் விபத்துக்களும், உயிரிழப்புகளும் அதிகம் ஏற்பட்டுள்ளன. இந்த ஆண்டு ரயில்களின் பாதுகாப்பு, பயணிகளின் பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு செய்வது பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரயில்வே துறைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் தொகை ரூ.55000 கோடி. ஐஆர்சிடிசி இணையத்தளம் மூலம் ரிசர்வ் செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளுக்கு சர்வீஸ் சார்ஜ் இல்லை. விரைவில் புதிய ரயில்வே கொள்கை அறிவிக்கப்படும். அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருகும்.
ரயில்வே இ-டிக்கெட்டுகளுக்கான சேவை கட்டணம் ரத்து. பணமற்ற பரிவர்த்தனைக்கு ஊக்கம் தர நடவடிக்கை போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் செயல்பட்டுவரும் திட்டங்களுக்கு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது ஏமாற்ற அளித்துள்ளது என்கின்றனர் ரயில் பயணிகள் சங்கத்தினர்.
•2017-18 நிதியாண்டில் ரயில்வே துறைக்காக ரூ.1.31 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும். இது நடப்பு நிதியாண்டில் ரூ.1.21 லட்சம் கோடியாக உள்ளது.
• 3,500 கி.மீ. துரத்துக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும். இது நடப்பு நிதியாண்டில் 2,800 கி.மீ. ஆக உள்ளது.
• ரயில் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடியில் தேசிய ரயில் பாதுகாப்பு நிதியம் உருவாக்கப்படும்.
• அடிக்கடி ஏற்படும் ரயில் விபத்துகளை தடுக்க ரயில் பாதைகள் மற்றும் சமிக்ஞைகளை மேம்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும். மேலும், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 2020க்குள் அகல ரயில் பாதைகளில் உள்ள ஆளில்லா லெவல் கிராஸிங்குகள் அகற்றப்படும்.
•நாடு முழுவதும் 500 ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.
•அனைத்து ரயில் பெட்டிகளிலும் 2019-க்குள் உயிரி கழிவறை அமைக்கப்படும். பயணிகளின் வசதிக்காக, என்னுடைய பெட்டியை சுத்தம் செய்யவும் என்ற செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்படும்.
•இணையதளம் வழியாக டிக்கெட் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில், ஐஆர்சிடிசி இணையதளம் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு சேவைக் கட்டணம் ரத்து செய்யப்படும் ஆகிய அறிவிப்புகள் பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
•தமிழகத்திற்கு புதிய ரயில்கள் அறிவிப்பு இல்லை என்பதும் பெரிய ஏமாற்றமாக உள்ளது.