பட்ஜெட்டில் தங்க இறக்குமதி வரி குறையுமா? - நகை விற்பனையாளர்கள் எதிர்பார்ப்பு
மத்திய பட்ஜெட்டில் தங்க நகைகள் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் தங்கம் இறக்குமதிக்கான வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
டெல்லி: தங்கம் இறக்குமதிக்கான வரியை 10 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாகக் குறைக்க வேண்டுமென நகை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
உலக அளவில் தங்கம் நுகர்வில் இந்தியா இரண்டாவது இடம் வகிக்கிறது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் தங்கத்திற்கான இறக்குமதி குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால் நகை, உற்பத்தி விற்பனையாளர்கள் தங்கம் வாங்குவதை தள்ளிப்போட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதால் அதன் விற்பனையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. வெளிநாடுகளில் தங்கத்தின் விலை குறைவு என்பதால் வெளிநாடுகளிலிருந்து தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால் இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு கட்டுப்பாடு விதித்ததால் தங்கம் சட்டவிரோதமாக தமிழகத்திற்கு கடத்தப்பட்டு வருகிறது.
10 கிலோ தங்கம்
2012ஆம் ஆண்டு வரை வெளிநாடுகளிலிருந்து 10 கிலோ வரை தங்கம் கொண்டுவரலாம் என்றும், அதற்கான இறக்குமதி வரி 5 சதவிகிதம் மட்டுமே இருந்தது. இந்நிலையில் 2012ம் ஆண்டுக்குப் பிறகு அதிக பட்சமாக ஒரு கிலோ தங்கம் மட்டுமே வெளிநாடுகளிலிருந்து கொண்டுவர அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான இறக்குமதி வரியும் 10 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
3 சதவிகிதம் ஜிஎஸ்டி
கடந்த ஜூலை முதல் இறக்குமதி தங்கத்தின் மீது 3 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு நபர் வெளிநாடுகளிலிருந்து ஒரு கிலோ தங்கம் கொண்டுவந்தால் அவர் 13 சதவிகிதம் வரி கட்ட நேரிடும். எனினும், கடந்த 3 ஆண்டுகளைவிட தற்போது ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு தங்க கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுங்கத்துறை
பெரும்பாலும் துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து விமானம் மூலம் சென்னை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களுக்கு தங்கம் கடத்திவரப்படுவதாகவும், இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் வழியாக படகு மூலம் தங்கம் கடத்திவரப்படுவதாகவும், பின்னர் சாலை மார்க்கமாக கோவை, மதுரை போன்ற இடங்களுக்கு கடத்திச் செல்லப்படுவதாகவும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை மற்றும் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
இறக்குமதி வரி குறையுமா?
இந்தியா தற்போது இறக்குமதி செய்யும் தங்கத்தில் 80 சதவிகிதம் நகைகளுக்கே பயன்படுத்தப்படுகிறது.
தங்கம் இறக்குமதி வரி குறைக்கப்பட்டால் அது இந்தியாவின் தங்க தேவைக்கு ஊக்கமளிக்கும் என்பது நகை விற்பனையாளர்களின் நம்பிக்கை. 2013ஆம் ஆண்டு தங்கம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 10 சதவிகித வரியை 2 முதல் 4 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்பது இந்திய தங்க நகை விற்பனையாளர் சங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.
தொடரும் கைது
ஜிஎஸ்டி அமலுக்குப் பிறகு கடந்த ஜூலை மாதம் மட்டும் சென்னை, திருச்சி, கோவை விமான நிலையங்களில் 3 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள 12 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
நகை தேவைக்காக தங்கம் அதிக அளவில் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.2015-16 நிதியாண்டில் இந்த இறக்குதி 3,071 கோடி டாலராக இருந்தது. பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி வரி குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் இதற்கு காரணம்.
200 டன் தங்கம்
உலக தங்க கவுன்சிலின் இந்தியாவுக்கான நிர்வாக இயக்குநர் பி.ஆர்.சோமசுந்தரம், 2015ம்ஆண்டு 119 டன் தங்கம் இந்தியாவுக்கு கடத்தப்பட்டுள்ளது. 2016ல் 200 டன்தங்கம் கடத்தப்பட்டுள்ளது. ஆனால் பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு தங்கம் கடத்தல் குறைந்தது. இதன்பிறகு பணப்புழக்கத்துக்கு பிறகு 100 டன் தங்கம் கடத்தப்பட்டுள்ளது என சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
தங்க இறக்குமதி
கடத்தல் தங்கத்தை பலரும் வாங்க ஆர்வம் காட்ட காரணம் 3 சதவிகிதம் ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்பதில் என்று சென்னை மொத்த நகை விற்பனையாளர் கூறியுள்ளார். மத்திய அரசு 10 சதவிகிதம் இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். தங்க கடத்தலை தடுக்கவும், இறக்குமதியை அதிகரிக்கவும் என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமோ அதற்கான வேலைகளை நிதி அமைச்சகம் செயல்படுத்தும் என்று நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர்.