பட்ஜெட் 2018: வேளாண் கல்வி ஆராய்ச்சிக்கு அதிக நிதி - விவசாய கடன் 11 லட்சம் கோடி இலக்கு
2018 -19 பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி: வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் பட்ஜெட்டில் விவசாய கடனுக்கு ரூ. 11 லட்சம் கோடி ஒதுக்க அருண்ஜெட்லி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29ம் தேதி தொடங்குகிறது. 2018-19ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட்டில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் பொருட்டு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்யும் மத்திய அரசு, வேளாண் துறையில் தொழில்நுட்ப மேம்பாட்டில் அதிகக் கவனம் செலுத்தவுள்ளது.
விவசாயத் துறையில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகளுக்காக ரூ.8,000 கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிதி சென்ற நிதியாண்டு ஒதுக்கீட்டைவிட 15 சதவிகிதம் அதிகமாகும்.
பட்ஜெட் 2018
2018-19 நிதியாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே விவசாயத் துறைக்கு குறைந்தது 10 சதவிகிதம் கூடுதலான அளவு நிதி ஒதுக்கப்பட்டு வந்தநிலையில், இந்த ஆண்டில் 15 சதவிகிதம் கூடுதலான நிதி ஒதுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விவசாய கடன்
பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வட்டார கிராம வங்கிகள் ஆகியவை அதிக அளவில் விவசாய கடன்களை அளிக்கின்றன. அவற்றில் கூட்டுறவு மற்றும் கிராம வங்கிகள் நபார்டு வங்கி உதவியுடன் விவசாய கடன்களை அளிக்கின்றன. நடப்பு நிதியாண்டில் அனைத்து விவசாய கடன் வங்கி கணக்குகளும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன.
கடன் சலுகை
நடப்பு நிதியாண்டில் ரூ. 10 லட்சம் கோடி விவசாய கடன் வழங்க இலக்கு வைக்கப்பட்டது. இதில் கடந்த செப்டம்பர் வரை ரூ. 6.25 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக விவசாயிகளுக்கு 9 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படும். கூடுதல் சலுகையாக ரூ. 3 லட்சம் வரையிலான குறுகிய கால கடன்களுக்கு 7 சதவீத வட்டி மட்டுமே வசூலிக்கப்படுகிறது. கடனை உரிய தேதியில் திருப்பி செலுத்திவிட்டால் மேலும் 3 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு மிகக்குறைந்த அளவாக 4 சதவீத வட்டி மட்டுமே வாங்கப்படுகிறது.
15சதவிகிதம் அதிகம்
2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வேளாண் துறைக்காக ஒதுக்கப்பட்ட ரூ.7,000 கோடியில் 90 சதவிகிதம் டிசம்பர் வரையில் செலவிடப்பட்டுள்ளது. 2018 -19 மத்திய பட்ஜெட்டில் விவசாயத் துறையில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகளுக்காக ரூ.8,000 கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிதி சென்ற நிதியாண்டு ஒதுக்கீட்டைவிட 15 சதவிகிதம் அதிகமாகும்.
விவசாய ஆராய்ச்சி நிதி
விவசாயத்தில் தொழில்நுட்பக் கருவிகள் உபயோகித்தல், வர்த்தகப் பயன்பாட்டுக்கான கால்நடைக் கலப்பினம், குறிப்பிட்ட சில பயிர்களின் மரபணு மாற்று முறை, பயிர்களை வலுவூட்டும் முறை போன்ற நடவடிக்கைகள் விவசாய ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது.