பட்ஜெட் 2018: வருமான வரி செலுத்துவோருக்கு மற்றொரு அடி.. செஸ் வரி 4 சதவீதமாக அதிகரிப்பு
Recommended Video
டெல்லி: வருமான வரி செலுத்துவோருக்கு கூடுதலாக ஒரு சதவீதம் சுமை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆம், ஆரோக்கியம் மற்றும் கல்விக்கான செஸ் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்றைய பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
ஜேட்லி இன்று தாக்கல் செய்த வருமான வரி கட்டமைப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
60 வயதுக்கு கீழேயுள்ளவர்களுக்கு, ரூ.2.50 லட்சம் வரையிலான ஆண்டு வருவாய் பிரிவினருக்கு வரி கிடையாது என்பதும், ரூ.2.50 லட்சம் முதல், ரூ.5 லட்சம் வரையிலான வருவாய் பிரிவினருக்கு 5 சதவீதம் வரி, ரூ.5-10 லட்சம் வரையிலான பிரிவினருக்கு 20 சதவீத வரி, ரூ.10 லட்சத்திற்கு மேற்பட்ட வருவாய் பிரிவினருக்கு 30 சதவீத வரி என்பதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
வரிக்கு வரி
அதேநேரம், வருமான வரி செலுத்துவோர் அதனுடன் சேர்த்து, 3 சதவீதம் செஸ் வரி செலுத்தும் நடைமுறை அமலில் இருந்ததை 4 சதவீதமாக அதிகரித்துள்ளார் அருண் ஜேட்லி. அதாவது, வருமான வரி செலுத்தும் தொகையில் இருந்து 4 சதவீதம் செஸ் வரியாக வசூலிக்கப்படும். வரிக்கு ஒரு வரி போடுவதுதான் செஸ்.
கூடுதல் சுமை
1 சதவீதம்தான், அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறினாலும், ஏற்கனவே வருமான வரி கட்டமைப்பில் மாற்றம் செய்யாததால் வருத்தத்தில் உள்ள மாத வருவாய் பிரிவினருக்கு இது கூடுதல் சுமைதான். 4 சதவீத செஸ் வரி விதிப்பு மூலம், ரூ.11,000 கோடி வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக அருண் ஜேட்லி தெரிவித்தார்.
செஸ் வரி விதிப்பு இப்படித்தான்
60 வயதுக்கு உட்பட்ட, தனி நபர் ஒருவரின் ஆண்டு வருமானம் ரூ.5,00000 என்று வைத்துக்கொள்வோம். அவருக்கான வருமான வரி ரூ.13,000 ஆகும். அதில் செஸ் ரூ.125 ரூபாயாகும். அதுவே ஒருவரின் ஆண்டு வருமானம் பத்து லட்சமாக இருந்தால், அவருக்கான வருமான வரி ரூ.1,17,000 ஆகவும், அதன் மீதான செஸ் வரி ரூ.1,125 என்ற அளவிலும் இருக்கும். ரூ.15,0000 ஆண்டு வருமானம் உள்ள ஒருவர் ரூ.2,73,000 வருமான வரியும், ரூ.2,625 செஸ் வரியும் செலுத்த வேண்டிவரும். வருமான வரியின் மீது 4 சதவீதம் செஸ் வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பின் அடிப்படையில் இந்த கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பரஸ்பர நிதிக்கும் வரி
மற்றொரு கூடுதல் வரி முதலீட்டாளர்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. தற்போது 12 மாதங்களுக்கும் மேற்பட்ட பங்கு பரஸ்பர நிதிகளுக்கு வரி கிடையாது. இனிமேல் அதற்கும் வரி உண்டு. புது திட்டப்படி, 2018 ஜனவரி 31ம் தேதிவரை மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளுக்கு வரி கிடையாது.
10 சதவீதம் வரி
ரூ.1 லட்சத்திற்கு மேலான வருவாய் பெறும் நீண்டகால கேபிடல் ஆதாயத்திற்கு 10 சதவீத வரி விதிக்கப்படும் என்பது ஜேட்லியின் அறிவிப்பு. இது பங்குச் சந்தை சார்ந்த தொழிலில் இருப்போருக்கு பின்னடைவாகும்.