பெங்களூரில் ரூ.17,000 கோடியில் புறநகர் ரயில் சேவை.. கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஜேட்லி அதிரடி
Recommended Video
பெங்களூர்: கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் ரூ.17 ஆயிரம் கோடியில் புறநகர் ரயில் சேவை ஏற்படுத்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தனது பட்ஜெட்டில் அறிவித்தார்.
பட்ஜெட் உரையின்போது ரயில்வே துறை சார்ந்த அறிவிப்புகளையும், அருண் ஜேட்லி வெளியிட்டார். அப்போது பெங்களூருவில் ரூ.17,000 கோடி செலவில் புறநகர் ரயில் சேவை ஏற்படுத்தப்படும் என்றார்.
பெங்களூரில் 160 கி.மீ தூரத்திற்கு புறநகர் ரயில் சேவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜேட்லி தெரிவித்தார். இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வரும் நகரம் பெங்களூர். ஆனால், சென்னை, மும்பையை போன்ற புற நகர் ரயில் சேவை அங்கு இல்லை. எனவே சாலைகள் டிராபிக் ஜாம் ஆகி பெரும் நெருக்கடியை மக்கள் சந்தித்து வருகிறார்கள்.
எனவே புறநகர் ரயில் சேவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்தது. கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், பெங்களூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியிலுள்ள சுமார் 40க்கும் மேற்பட்ட சட்டசபை தொகுதி மக்களை குஷிப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
தற்போது பெங்களூரில் சாலை போக்குவரத்தை தவிர்த்து, மெட்ரோ ரயில் மட்டுமே இயங்கி வருகிறது. அதுவும் பெரும்பாலான நகர பகுதிகளில் இன்னும் விரிவுபடுத்தவில்லை.
இதனிடையே, 25,000 பயணிகளுக்கு மேல் தினசரி வந்து செல்லும் ரயில் நிலையங்களில் எக்ஸ்கலேட்டர் அமைக்கப்படும் என்றும்நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார். அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் வைஃபை , சிசிடிவி வசதி செய்து கொடுக்கப்படும் என்று ஜேட்லி தெரிவித்தார்.