மாத சம்பளதாரர்களுக்கு வருமான வரி உச்ச வரம்பு உயர வாய்ப்பு உள்ளதா.. நெருக்கடியில் மத்திய அரசு!
Recommended Video
டெல்லி: பணமே இல்லாமல் மத்திய அரசு தவித்து வருகிறது. பொருளாதார மந்த நிலையால் தொழில்கள் நஷ்டம் அடைந்துவிட்டது. இதனால் வரி வருவாயில் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. பட்ஜெட்டில். 2 லட்சம் கோடி துண்டு விழுகிறது.. எனவே வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்பட வாய்ப்பு இல்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை வந்த வருமானம் திடீரென நின்று போனால் காசே இல்லாமல் போகும். அப்படி போகும் போது அடுத்த மாத வாடகை எப்படி கொடுப்பது, காய்கறி எப்படி வாங்குவது, ஸ்கூலுக்கு பீஸ் கட்டுவது எப்படி, கடன் வாங்கி ஓட்டலாமா, வருவாயை எப்படி பெருக்குவது என்று சாமானியர்கள் யோசிப்பார்கள். அப்படித்தான் மத்திய அரசு இப்போது செலவுக்கு எப்படி பணத்தை புரட்டுவது என்று கடினமாக யோசித்து வருகிறது.
ஏனெனில் மத்திய அரசிடம் சுத்தமாக பணமே இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதற்கு உதாரணமாக சொல்வதென்றால் ரிசர்வ் வங்கியின் கையிருப்பை கேட்டு வாங்கியதை கூறலாம்.
புலியிடம் சிக்கிய நபர்.. சிறு காயமும் இல்லாமல் சாமர்த்தியமாக உயிர் தப்பும் வீடியோ காட்சி
வரி விலக்கு வரம்பு
சரி இப்போது சொல்லவரும் விஷயத்துக்கு நேரடியாக வந்துவிடுவோம். இந்த ஆண்டு வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்பட எந்த வாய்ப்பும் இல்லை என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு தற்போதைய நிலையில் 2.5லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே வரி விலக்கு அளித்து வருகிறது. 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5 சதவீத வருமான வரி விதிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த பட்ஜெட்டில் 2.5 முதல் 7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5 சதவீதம் வரி என்ற இலக்குகள் கொண்டுவரப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது,.
10 சதவீத வரி
இதேபோல் ரூ.7லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 10 சதவீதமும், 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 20 சதவீதம் வரியும், 20 லட்சம் முதல் 2 கோடி வரை வருவாய் ஈட்டுவோருக்கு 3 சதவீதமும், 10 கோடிக்கு மேல் உள்ளவர்களுக்கு 30 சதவீதம் மற்றும. 3.5 சதவீத செஸ் வரி சேர்த்து நிர்ணயிக்கப்படலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இதன்படி உச்சவரம்பு உயர்த்தப்பட வாய்ப்பு இல்லை என்கிறது மத்திய அரசு வட்டாரக்ஙள்.
எப்படி பெறலாம்
இப்போது உள்ள சூழலில் 5லட்சம் வரை சம்பாதிப்போர் வரி விலக்கு எளிதாக பெற முடியும். அதற்கு மேல் என்றால் பெறுவோர், அரசு செல்வ மகள், செல்வ மகன் சேமிப்பு திட்டம், பிஎப்பில் கூடுதலாக முதலீடு செய்வது, எல்ஐசியில் முதலீடு செய்வது,வீட்டு வாடகை செலவு, பள்ளி கல்வி கட்டணம், மருத்துவ செலவு, வங்கியில் சேமிப்பு, அஞ்சலகத்தில் சேமிப்பு என பல வழிகளில் வருமானத்தை சேமித்து வருமான வரியில் இருந்து மக்கள் தப்பிக்க முடியும். அந்த வகையில் சுமார் 7 லட்சம் வருமானம் வரை உள்ளவர்கள் வரி விலக்கு பெறுவதற்கு அரசு வழிவகை செய்துள்ளது..
கடன் வாங்குவோருக்கு
ஆனால் அதேநேரம் பணத்தை சேமிக்காமல் செலவு செய்வோருக்கு, பர்சனல் லோன், பொருட்கள வாங்க லோன் உள்ளிட்ட கடன்களை எடுத்து அவதிப்படுவோருக்கு எந்த சலுகையும் இல்லை. அவர்கள் கட்டாயம் வருமான வரி கட்டியே ஆக வேண்டும் என்ற நிலையே இப்போது உள்ளது. இந்த நிலை இனியும் தொடரவே வாய்ப்பு உள்ளது. ஏனெனில் இந்த பட்ஜெட்டில் சுமார் 2லட்சம் கோடி வருவாய் பற்றாக்குறை உள்ளதால் வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்பட வாய்ப்பு இல்லை என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொழில்கள் வரி குறைப்பு
தற்போது உள்ள நிலையில் வரி வருவாயை உயர்த்த மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. பொருளாதார மந்த நிலையில் தொழில்கள் கடுமையாக நஷ்டம் அடைந்துள்ளன. இதனால் 2லட்சம் கோடி வரி வருவாய் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பெருநிறுவனங்களுக்கான வரி 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாகவும், புதிய நிறுவனங்களுக்கான வரி 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக கடந்த அக்டோபரில் குறைக்கப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு 1.45 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டு முதலீடு
இது தவிர வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால மற்றும் குறுகிய கால மூலதன ஆதாயங்களுக்கான வரியையும் அரசு ரத்து செய்தது. இதன் காரணமாக 1400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. பொருளாதார மந்த நிலையால் ஜிஎஸ்டி வருவாய் இலக்கு 50000 கோடி ரூபாய் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வருமான வரி குறைப்பில்லை
இப்படி அரசுக்கு நேரடி மற்றும் மறைமுக வரி வருவாயில் 2லட்சம் கோடி ரூபாய் முதல் 2.50 லட்சம் கோடி ரூபாய் வரை பற்றாக்குறை ஏற்படும் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இதில் இருந்து மீள்வதற்கு வருவாயை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது. எனவே வரும் நிதியாண்டில் மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்பட வாய்ப்பு இல்லை என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.