படம் ரிலீஸ் ஆகி மறுநாளே தூக்கிட்டாங்க.. மோசம்.. பட்ஜெட் 2020க்கு ரிவ்யூ கொடுத்த ப. சிதம்பரம்!
இந்திய பட்ஜெட் குறித்து யாருமே பேசவில்லை, படம் ரிலீஸ் ஆன மறுநாளே அதை தியேட்டரில் இருந்து தூக்கியது போல மிக மோசமாக பட்ஜெட் அமைந்துள்ளது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர், எம்பி ப. சிதம்பரம் கருத்து
Recommended Video
டெல்லி: இந்திய பட்ஜெட் குறித்து யாருமே பேசவில்லை, படம் ரிலீஸ் ஆன மறுநாளே அதை தியேட்டரில் இருந்து தூக்கியது போல மிக மோசமாக பட்ஜெட் அமைந்துள்ளது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர், எம்பி ப. சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் இரண்டு நாட்கள் முன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டாவது முறையாக இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதில் வருமான வரி அறிவிப்பு தொடர்பான முக்கியமான அறிவிப்புகள் வெளியானது. இந்த படஜெட் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த பட்ஜெட் குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர், எம்பி ப. சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
ப. சிதம்பரம் தெரிவித்துள்ள கருத்தில், நிதி அமைச்சர் நீண்ட நேரம் பட்ஜெட் குறித்து பேசினார். சுமார் 160 நிமிடங்கள் அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்ய எடுத்துக் கொண்டார். ஆனால் அதில் பட்ஜெட் குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை. பட்ஜெட் குறித்த தெளிவான அம்சங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
இதனால்தான் அதை மோசமான பட்ஜெட் என்று கூறுகிறோம். இதனால்தான் அந்த பட்ஜெட் குறித்து யாரும் பேசவில்லை. செய்தி தாள்களின் முன்பக்கங்களில் இருந்தும் இதனால்தான் பட்ஜெட் குறித்த செய்திகள் இரண்டாம் நாளே காணாமல் போய்விட்டது. இதனால்தான் டிவி சேனல்களிலும் பட்ஜெட் குறித்து யாருமே விவாதிக்கவில்லை.
இதை எளிதாக கூறலாம். நேற்று வெளியான படத்தை இன்றே தியேட்டரில் இருந்து தூக்கிவிட்டால் எப்படி இருக்கும். அப்படிதான் இந்த பட்ஜெட். பல பேர் வந்து இது பற்றி பேச முயன்றார்கள். பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்தனர். மாரத்தான் ஓட்டம் போல பேச முயன்றார்கள். ஆனால் பாவம் மக்களுக்குத்தான் இந்த அரசு என்ன சொல்ல வருகிறது என்று தெரியவில்லை. ஏனென்றால் இந்த பட்ஜெட்டில் மக்களுக்கான திட்டங்கள் எதுவும் இல்லை, என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.