2 கட்டங்களாக பிப்.23 முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர்...பிப். 25-ல் ரயில்வே, 29-ல் பொதுபட்ஜெட் தாக்கல்
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 23-ந் தேதி தொடங்கி 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. ரயில்வே பட்ஜெட் பிப். 25-ந் தேதியும் பொதுபட்ஜெட் 29-ந் தேதியும் தாக்கல் செய்யப்பட உள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வழக்கமாக பிப்ரவரி இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடைபெறும். இந்த ஆண்டு தமிழகம், கேரளா, புதுவை, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இதனால் நாடாளுமன்ற கூட்டத் தொடரை எந்த நாட்களில் நடத்துவது என்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. இதற்காக இந்த 5 மாநில அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற குழுத் தலைவர்களிடன் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இன்று ஆலோசனையும் நடத்தியிருந்தார்.
இதன் பின்னர் நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில் 2 கட்டங்களாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்த முடிவெடுக்கப்பட்டது.
அதாவது பிப்ரவரி 23-ந் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வை மார்ச் 16-ந் தேதி வரை நடத்துவது;
First part of Budget session to end on March 16; second part starts from April 25 to May 13: Union Minister Venkaiah Naidu after CCPA.
— Press Trust of India (@PTI_News) February 4, 2016
அதன் பின்னர் ஏப்ரல் 25-ந் தேதி தொடங்கி மே 13-ந் தேதி வரை 2-வது கூட்டத் தொடரை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இது இந்த ஆண்டின் முதலாவது கூட்டத் தொடர் என்பதால் பிப்ரவரி 23-ந் தேதியன்று இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்த உள்ளார்.
ரயில்வே, பொதுபட்ஜெட் தாக்கல்
மேலும் வரும் 25-ந் தேதி ரயில்வே பட்ஜெட்டையும் 26-ந் தேதி பொருளாதார ஆய்வறிக்கையும் 29-ந் தேதி பொது பட்ஜெட்டையும் தாக்கல் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.