நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: பட்ஜெட் கூட்டத் தொடரில் புயலை கிளப்ப எதிர்கட்சிகள் திட்டம்
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி உரையுடன் நாளை தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்ததாக இருக்கும் எனத் தெரிகிறது.
அவசரச் சட்டங்களுக்கு பதிலாக 6 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போடும் என்று கூறப்படுகிறது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி மார்ச் 20 வரையும் இரண்டாவது பகுதி ஏப்ரல் 20 முதல் மே 8 வரையும் நடைபெறுகிறது.
ஜனாதிபதி உரை
தொடக்க நாளான 23-ஆம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றுகிறார். 26ஆம் தேதி ரயில்வே பட்ஜெட்டும் 28ஆம் தேதி மத்திய பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளன.
பட்ஜெட் தாக்கல்
மூன்று மாதங்கள் நடைபெறும் பட்ஜெட் தொடரில் நரேந்திர மோடி அரசு முதல்முறையாக தனது முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது.
புயலைக்கிளப்பும்
இந்த கூட்டத் தொடரில் அரசுக்கு எதிராக பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் இந்த கூட்டத்தொடரில் புயல் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசுக்கு நெருக்குதல்
பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் பாதியிலேயே அவசரச் சட்டங்கள் சார்ந்த 6 மசோதாக்களை அரசு நிறைவேற்ற வேண்டி உள்ளது. அதன்படி காப்பீடு, நிலக்கரி துறைகள் மீதான அவசரச் சட்டங்களை இயற்ற வேண்டிய நெருக்குதல் அரசுக்கு உள்ளது.
தயவு தேவை
லோக்சபாவில் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளது. அதேசமயம் ராஜ்யசபாவில் போதிய பலம் இல்லை. இதனால் மசோதாக்களை நிறைவேற்ற காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை பாஜக கோரியுள்ளது.
ஒத்துழைப்பு கிடையாது
காங்கிரஸ் ஆட்சியின் திட்டங்களை மத்திய அரசு நீர்த்துப் போகச் செய்கிறது. எனவே பாஜக அரசின் மசோதாக்களுக்கு ஆதரவளிக்க மாட்டோம் என்று அந்தக் கட்சி அறிவித்துள்ளது.
சுமூகமாக நடக்குமா?
எனினும், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவும் லோக்சபா தலைவர் சுமித்ரா மகாஜனும் அனைத்துக் கட்சி கூட்டங்களை நடத்தி அவையை சுமுகமாக நடத்த ஆதரவு கோரியுள்ளனர்.
ஆவணங்கள் திருட்டு
பெட்ரோலிய துறை உட்பட பல்வேறு அமைச்சக ஆவணங்கள் திருடப்பட்டு, பெரு நிறுவனங்களுக்கு விற்கப்பட்டு வந்தது சமீபத்தில் வெட்டவெளிச்சமானது. இதில் அந்த அமைச்சக ஊழியர்களே முக்கிய குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நாடாளுமன்றத்தில் பெரும் புயலைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்கட்சிகள் தயார்
அண்மையில் நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இது எதிர்க்கட்சிகளுக்கு துணிவை அளித்திருப்பதால் பட்ஜெட் கூட்டத்தொடர் பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்ததாக இருக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.