தேசிய நெடுஞ்சாலைகளின் அனைத்து டோல்கேட்களிலும் கழிப்பறை: நிதின் கட்கரி உத்தரவு
தேசிய நெடுஞ்சாலைகளின் வழிகாட்டுதலின் படி அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கழிப்பறைகள் கட்ட மத்திய அமைச்சர் உத்தவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி: நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறைகள் அமைக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவிட்டுள்ளார்.
நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் மக்களுக்கு போதிய அளவில் கழிப்பறைகள் இல்லாதது பெரிய குறையாக உள்ளது. இதனால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக மத்திய, மாநில அரசுகளுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சமீபத்தில் தனது துறையின் பிராந்திய அலுவலகங்களுடன் 'வீடியோ கான்பரன்ஸிங்' முறையில் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, நாட்டில் உள்ள அனைத்து சங்கச் சாவடிகளிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே கழிப்பறைகள் அமைக்க உத்தரவிட்டுள்ளார். தண்ணீர் மற்றும் மின்சார வசதியுடன் அவற்றை தூய்மையாக பராமரிக்கவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது:
"தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கழிப்பறைகள், மருத்துவ வசதி செய்யப்பட வேண்டும் என மத்திய அரசு உடனான ஒப்பந்தத்தில் உள்ளது. ஆனால், இவற்றை பெரும்பாலான சுங்கச்சாவடிகள் பின்பற்றவில்லை என புகார்கள் வந்துள்ளன.
தேசிய நெடுஞ்சாலை வழிகாட்டுதலின்படி அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கழிப்பறைகள் அமைப்பதுடன் 60 கி.மீ தொலைவுக்குள் உணவு விடுதி, கழிப்பறைகள் மற்றும் பெட்ரோல் பங்க்குகள் அமைக்கப்பட வேண்டும் என உள்ளது.
இதை தீவிரமாக அமல்படுத்த அமைச்சர் முடிவு செய்துள்ளார்" என்று தெரிவித்தனர்.
கடந்த 2015-ல் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம்இ இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களின் பெட்ரோல் பங்க்குகள் அருகில் கழிப்பறை அமைக்க உத்தரவிடப்பட்டது. இதற்காக கட்டணம் வசூலிக்கலாம் என்று கூறியும் முறையாக அந்த திட்டம் அமல்படுத்தப்படவில்லை.