பெங்களூரில் பயங்கரம்.. 4 மாடி கட்டிடம் இடிந்து 3 தொழிலாளர்கள் சாவு.. 7 பேர் படுகாயம்
Recommended Video
பெங்களூர்: பெங்களூரில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பல தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். 3 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
பெங்களூர் நகரின் சர்ஜாப்பூர் சாலையிலுள்ள, கசுவனஹள்ளி பகுதியில், ரஃபீக் என்பவருக்கு சொந்தமான 4 மாடி கட்டிடம் உள்ளது. பி.ஜி.யாக செயல்பட்டு வந்த அந்த கட்டிடத்தை வணிக நோக்கத்திற்கான கட்டிடமாக மாற்றும் பணி நடந்து வந்தது.
இந்த நிலையில் இன்று மாலையில் திடீரென அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் சுமார் 20 தொழிலாளர்கள் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். இதையறிந்ததும், தீயணைப்பு துறை, காவல்துறை, தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மாலை 7.30 மணி நிலவரப்படி, 8 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். இன்னும் சிலர் கட்டிடத்திற்குள் சிக்கியுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் சிலர் லேசான காயங்களுடன் தப்பியுள்ளனர். சிலருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒரு தொழிலாளி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். மற்றொரு தொழிலாளி மீட்கப்படும்போதே இறந்த நிலையில் கிடந்ததாக தெரியவந்துள்ளது.
மேலும் பல தொழிலாளர்கள் ஆங்காங்கு சிக்கியுள்ளனர். அசைவின்றி பல உடல்கள் அப்படியே கிடப்பதாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள குழுவினர் தெரிவித்தனர். வட மாநிலங்கள் மற்றும் வட கர்நாடகாவை சேர்ந்த தொழிலாளர்கள் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரவு நேரம் என்பதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்பு பணி மேலும் சிக்கலான கட்டத்தை எட்டியுள்ளது.
இதுகுறித்து போலீஸ் துணை கமிஷனர், அப்துல் அகாதி கூறுகையில், முதலில் மீட்பு பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்படும். அந்த ஏரியாவில், மின் இணைப்பை துண்டித்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.
இதில் மீட்கப்பட்ட பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுவரை காயமடைந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.