சிலிண்டர் வெடித்ததால் இடிந்து விழுந்த கட்டடம்: 2 மணிநேரத்துக்குப் பின் சிறுமி உயிருடன் மீட்பு!
பெங்களூரில் சிலிண்டர் வெடித்ததால் தரைமட்டமான கட்டடத்தின் இடிபாடுகளில் இருந்து 2 மணி நேரத்துக்குப் பின் ஒரு சிறுமி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
பெங்களூரு: சிலிண்டர் வெடித்ததால் தரைமட்டமான கட்டடத்தின் இடிபாடுகளில் இருந்து 2 மணி நேரத்துக்குப் பின் ஒரு சிறுமி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
பெங்களூருவில் உள்ள எஜிபுரா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இதில் மொத்தம் 6 வீடுகள் உள்ளன.
இந்நிலையில், இன்று காலை 6.30 மணியளவில் குடியிருப்பில் இருந்த வீடு ஒன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தது. இதில், அந்தக் கட்டடம் தரைமட்டமானது.
இதனையடுத்து இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை அகற்றும் பணியில் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கட்டட இபாடுகளுக்குள் சிக்கியிருந்த சிறுமியை தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றியுள்ளனர்.
சுமார் 2 மணி நேரத்துக்குப் பின் அந்த சிறுமி உயிருடன் மீட்பட்டுள்ளார். சிறுமியை தீயணைப்புத்துறையினர் உயிருடன் வெளியே கொண்டுவந்த போது அங்கே குழுமியிருந்தவர்கள் விசில் அடித்தும் கைத்தட்டியும் ஆரவாரம் செய்தனர்.
அந்த சிறுமியின் பெற்றோர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துவிட்டனர். இதனால் சிறுமியை தத்தெடுக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதனிடையே மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.