மும்பை அடுக்குமாடி கட்டிட விபத்து...3 மாத குழந்தை உள்பட 8 பேர் பலி!
மும்பையில் 4 அடுக்குமாடி கட்டிடம் புனரமைப்பு பணியின் போது இடிந்த விழுந்ததில் 8 பேர் பலியாகியுள்ளனர்.
மும்பை : மும்பையின் புறநகர்ப் பகுதியில் 4 அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 மாத குழந்தை உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர், 30க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என்று தெரிகிறது.
மும்பையின் கிழக்கு புறநகர்ப் பகுதியான கட்கோபாரின் தாமோதர் பூங்கா பகுதியில் 4 அடுக்கு மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் அடித் தளத்தில் நர்சிங் ஹோம் உள்ளது அதிர்ஷ்டவசமாக இங்கு நோயாளிகள் யாரும் இல்லை. மற்ற 4 தளங்களிலும் ஒவ்வொரு தளத்திலும் சுமார் 3 குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர்.
இந்தக் கட்டிடத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், அந்தப் பணியின் போது கட்டிடம் இடிந்து விழுந்ததாக நகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர். இன்று காலை நிகழ்ந்த இந்த இடிபாடுகளில் 30க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது. இந்தக் கட்டிடம் 30 ஆண்டுகள் பழமையானது என்று சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கி 3 மாத குழந்தை உள்பட 8 பேர் இது வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இடிபாடுகளில் மேலும் 30 பேர் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுவதால் இந்த கட்டிட விபத்தில் மேலும் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மீட்புக் குழுவினர் கூறுகின்றனர்.
மராட்டிய மாநிலத்தில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. மராட்டிய மாநிலத்தில் மழை காலங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து உயிரிழப்பு நேரிடுவது வழக்கமாகி வருகின்றன. எனவே கட்டிடங்களின் தரத்தை ஆராய்ந்து சரியான நடவடிக்கை எடுத்து உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்கவேண்டுமென சிலர் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். அரசு தரப்பில் ஆய்வு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.