அடடா... தெலுங்கானா முதல்வருக்கு "குண்டு" துளைக்காத பாத்ரூம்!
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் குண்டு துளைக்காத குளியலறையை பயன்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் குண்டு துளைக்காத கார் மற்றும் பஸ்ஸை தொடர்ந்து தற்போது குண்டு துளைக்காத குளியலறையையும் பயன்படுத்த உள்ளார்.
தெலுங்கானா முதல்வராக உள்ள சந்திரசேகர ராவ், குண்டு துளைக்காத கப்பல் போன்ற கார், 5 கோடி ரூபாய் மதிப்புள்ள பென்ஸ் நிறுவனத்தின் பஸ், இசட் பிளஸ் செக்யூரிட்டி என எப்போதும் பெரும் பாதுகாப்பு வளையத்துடனே வலம் வருகிறார்.
இந்நிலையில் தெலுங்கான மாநிலம் பேகம்பேட்டில் ஒரு லட்சம் சதுர அடியில் அரண்மனை போன்று கட்டப்பட்டுள்ள அவரது புதிய வீட்டில் உள்ள அனைத்து ஜன்னல்களும் குண்டு துளைக்காத கண்ணாடிகளால் பொருத்தப்பட்டுள்ளன.
குண்டு துளைக்காத வீடு
சந்திரசேகர ராவின் 2 படுக்கையறைகள் மற்றும் அவரது குளியலறையும் குண்டு துளைக்காத வகையில் பிரத்தியோகமாக அமைக்கப்பட்டுள்ளது. அவரது மகன் கேடிஆர் பயன்படுத்தும் அறைகளும் கார்களும் இதேபோல் குண்டுதுளைக்காத பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள உயர்தர கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
எட்டிப் பார்க்க முடியாது
மேலும் இந்த வீட்டை யாரும் எட்டிப்பார்க்காத வகையில் உயரமான சுற்றுச்சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. அலுவலகம் மற்றும் வீடு என சேர்த்து கட்டப்பட்டுள்ள இந்த வீட்டில் சந்திரசேகர ராவ் நாளை குடியேறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டைச் சுற்றிலும் எப்போதும் ஆயுதமேந்திய 50 காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டிருப்பார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒப்படைத்து விட்டு போங்க
சந்திரசேகர ராவை சந்திக்க யாரேனும் வந்தால் அவர்கள் கொண்டு வரும் மொபைல் போன், அணிந்திருக்கும் வாட்ச் மற்றும் ஏதேனும் மெட்டல் பொருட்கள் இருந்தால் அவை எல்லாவற்றையும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பவர்களிடம் ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குண்டு துளைக்காத பாத்ரூம் எதுக்கோ!
மாநில உளவுத்துறை அறிவுறுத்தலின் அடிப்படையில் சந்திரசேகராவ் இத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளாராம். அதுக்காக குளியலறையை எதுக்கு குண்டு துளைக்காததாக மாற்றியுள்ளனர் என்பதுதான் மக்களின் கேள்வியாக உள்ளது.