டுபு..டுபு.. டுபு... 'புல்லட்'டுக்கு ஒரு கோவில்.. பூஜை செய்து வழிபடும் அதிசய ஊர்!
ஜோத்பூர்: புல்லட் பிரியர்களைப் பார்த்திருக்கிறோம்.. ஏன் புல்லட் வெறியர்களைக் கூட இந்த நாடு கண்டிருக்கிறது.. அட புல்லட்களை மட்டுமே குறி வைத்துத் திருடும் திருடர்களைக் கூட (ஓசூரில் ஒரு 'திருட்டு ராஜா' இருந்தார்.. புல்லட்டை மட்டுமே அவர் திருடி விற்பார்.. வேறு பைக்கை கண் கொண்டும் பார்க்க மாட்டார்) இந்த நாடு சந்தித்திருக்கிறது... ஆனால் புல்லட்டை சாமியாக நினைத்துக் கொண்டாடும் மக்களைப் பார்த்திருக்கிறதா... ஆம் அப்படியும் ஒரு ஊர் நம்ம நாட்டிலேயே இருக்கிறது. ஜோத்பூரில்.
ஜோத்பூரிலிருந்து பாலி என்ற ஊருக்குப் போகும் வழியில்தான் இந்த புல்லட் கோவில் உள்ளது. இங்கு என்பீல்ட் புல்லட்தான் சாமி. அந்த புல்லட்டைத்தான் கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
உங்க ஊர் கூட்டம் எங்க ஊர் கூட்டம் கிடையாது... பெரும் கூட்டமே கூடுகிறது இந்த புல்லட் சாமியை வணங்கி வழிபடுவதற்கு.
பந்தாயி
இந்தக் கோவில் உள்ள கிராமத்தின் பெயர் பந்தாயி. ஜோத்பூரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
சூப்பர் மேன் புல்லட்
இங்கு புல்லட்டை நிறுத்தி சுற்றிக் கோவில் போல அமைத்துள்ளனர். அந்த புல்லட்டுக்கு அசாத்தியமான சக்திகள் இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள்.
பாதுகாப்பா போகனும்னா புல்லட்டை கும்பிடு
வாகனங்களில் செல்வோர்தான் அதிக அளவில் வருகின்றனர். புல்லட்டைக் கும்பிட்டு விட்டுப் போனால் பயணம் நல்லபடியாக அமையுமாம்.
ஓம் பன்னாவின் ஆவி
இந்தக் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்தான் ஓம் பன்னா. இவரது ஆவி தற்போது இந்த புல்லட்டுக்குள் இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள். பன்னா சாலை விபத்தில் உயிரிழந்தவர். புல்லட்டுக்குள் புகுந்த பன்னாவின ஆவி, பிற வாகனங்கள் விபத்தில் சிக்காத வண்ணம் காப்பதாக ஐதீகம்.
26 ஆண்டுகளுக்கு முன்பு
பன்னாவின் ஞாபகம் மற்றும் ஆவி புகுந்த புல்லட்டுக்கு மரியாதை செலுத்துவதற்காக 26 ஆண்டுகளுக்கு முன்பு இந்த புல்லட் கோவில் கட்டப்பட்டது.
போலீஸ் நிலையத்திலிருந்து திரும்பி வந்த புல்லட்
ஓம் பன்னா விபத்தில் இறந்த பின்னர் இந்த புல்லட்டை போலீஸார் வந்து கொண்டு போய் விட்டனராம். ஆனால் இந்த புல்லட் அதுவாகவே காவல் நிலையத்திலிருந்து ஊருக்கு வந்ததாம். பின்னர் போலீஸ்காரர்கள் திரும்ப எடுத்து வந்தனர். பஞ்ஜசாபுக்குக் கொண்டு போனார்களாம். அப்போதும் அதுவாகவே வந்ததாம். இதையடுத்தே கோவில் கட்டி விட்டனர்.
பத்தி கொளுத்தி மாலை போட்டு
தற்போது இந்த புல்லட்டுக்கு பத்தி கொளுத்தி மாலை போட்டு பூ மலர்களைத் தூவி வழிபடுகின்றனர் மக்கள்.
அட மரத்தையும் விடலையே..
ஓம் பன்னாவின் புல்லட் மோதிய மரத்திற்கும் கூட மக்கள் வழிபாடுகளை நடத்துகின்றனர்.
சரி பெட்ரோல் இருக்கா.. இல்லையா
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புல்லட்டில் தற்போது பெட்ரோல் இருக்கிறதா என்பது தெரியவில்லை. அது அப்போது என்ன மைலேஜ் கொடுத்தது என்பதும் தெரியவில்லை.