சர்வதேச நாடுகளுடன் போட்டியிட புல்லட் ரயில் திட்டம்: மோடி பேச்சு
அகமதாபாத்: அகமதாபாத்தில் இன்று காலை நடந்த விழாவில், பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர், ஷின்ஷோ அபேவும், புல்லட் ரயில் பணிகளுக்கான அடிக்கல்லைநாட்டினர்.
இத்திட்டம், ஜப்பானின் கடனுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது. 1 லட்சத்து, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதில், 65 சதவீத தொகையை, 0.1சதவீத வட்டியில், ஜப்பான் வழங்குகிறது.
விழாவில் ஷின்ஷோ அபே பேசுகையில், இந்தியா, ஜப்பான் உறவில் இது ஒரு முக்கியமான நாள். இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்திற்கு ஜப்பான் உதவியாக உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
வளர்ச்சிக்கு காரணம் புல்லட் ரயில்
விழாவில் மோடி பேசுகையில், 1964ல் புல்லட் ரயில் அறிமுகமான பிறகுதான் ஜப்பான் அதிவேகமாக வளர்ந்தது. சர்வதேச நாடுகளுடன் போட்டியிட இந்தியாவுக்கு புல்லட் ரயில் திட்டம் தேவைப்படுகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு போக்குவரத்து துறை முக்கியமானது.
வளர்ச்சி சாத்தியம்
இனி வரும் காலங்களில், எங்கெல்லாம் அதிவேக போக்குவரத்து கட்டமைப்பு உள்ளதோ அங்குதான் வளர்ச்சி என்பது சாத்தியம். உலகம் முழுக்கவுமே அதிவேக இணைப்புகள் குறித்துதான் நடவடிக்கைகள் உள்ளன.
சிறந்த நட்பு
நம்மில் யாராவது கடன் வாங்கிவிட்டு 50 வருடம் கழித்து தருவேன் என்று சொன்னால் ஒப்புக்கொள்வார்களா? ஆனால் ஜப்பான் 50 வருட கால கடனை நமக்கு வழங்க முன்வந்துள்ளது. 88000 கோடியை வெறும் 0.1 சதவீத வட்டியில் கடனாக வழங்கும் ஒரு சிறந்த தோழமையை ஜப்பானில் நாம் பெற்றுள்ளோம்.
ஏழ்மை ஒழிப்பு
நமது ரயில் நெட்வொர்க் மிகவும் பெரியது. ஒரு வாரத்தில் ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கைதான், ஜப்பானின் மொத்த மக்கள் தொகை. மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் பயணம், விமான பயணத்தைவிட நேரம் குறைந்தது. டெக்னாலஜி ஏழைகளுக்கு உதவும் என்றால், ஏழ்மையை ஒழிக்க டெக்னாலஜியால் முடியும் என்று அர்த்தம்.
|
துணிச்சல்
புல்லட் ரயிலும் அதை செய்யும். ரயில்வே துறையில் வேறு எந்த அரசும் எடுக்க துணியாத நடவடிக்கையை நாங்கள் எடுத்துள்ளோம். ரயில்வே, நெடுஞ்சாலை, கடல்வழி பாதை அல்லது விமானப்பாதை என எதுவாக இருந்தாலும், முன் எப்போதும் இல்லாத வேகத்தில் இந்த அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மும்பை-அகமதாபாத் நடுவே முதலாவது புல்லட் ரயில் இயக்கம் 2023ல் சாத்தியப்படும். இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.