பொருளாதாரத்திற்கு ஊக்கம் தரப்போகிறது மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்!
மும்பை: இந்தியா-ஜப்பான் இணைந்து, மும்பை-அகமதாபாத் நடுவே புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த உள்ளதால் பொருளாதார ரீதியாக பல்வேறு வளர்ச்சி ஏற்பட வாய்ப்பு ஏற்பட உள்ளது.
செப்டம்பர் 14ம் தேதி இந்த திட்டத்திற்கு பிரமர் மோடியும், ஜப்பான் பிரதமர் சின்சோ அபியும் இணைந்து அடிக்கல் நாட்ட உள்ளனர். இந்த திட்டத்தால் பல்வேறு துறைகளிலும் உற்பத்தி அதிகரிப்பதோடு, வேலை வாய்ப்பு கூடும்.
புல்லட் ரயில் திட்டத்தஇற்கு, 120 லட்சம் கியூபிக் மீட்டர் கான்க்ரீட் தேவைப்படும். வருடத்திற்கு 2 மில்லியன் டன் சிமெண்ட் இத்திட்டத்திற்கு தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. திட்டத்திற்காக 15 லட்சம் மெட்ரிக் டன் இரும்பு தேவைப்படும். ஆண்டுக்கு 5 லட்சம் டன் என்ற அளவில் இந்த தேவை பகிர்ந்தளிக்கப்படும். ஏனெனில் 3 ஆண்டுகளில் இத்திட்டம் நிறைவடைய உள்ளது.
நகர்ப்புற வளர்ச்சிக்கு இத்திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில் ஸ்டேஷன்கள் அமையும் பகுதிகளில் புதிய தொழில்கள் உருவாகும். தொழில்கள் விரிவடையும். சாலை மார்க்கமாகவோ, வழக்கமான எக்ஸ்பிரஸ் ரயில்களிலோ மும்பை-அகமதாபாத் நடுவே 8 மணி நேரம் பயணிக்க வேண்டிவரும். ஆனால் புல்லட் ரயில் 2 மணி நேரத்தில் இதை சென்றடையும்.
தற்போது ஒரு மணி நேரத்திற்கு 8 ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 40000 பயணிகள் இவ்விரு நகரங்கள் இடையே பயணிக்க முடியும். ஒரு ரயிலில் அதிகபட்சம் 750 பயணிகள் பயணிக்க முடியும். இது பின்னர் 1250 என உயர்த்தப்படும். எக்கனாமி ரேட்டில் இயக்கப்படும் 8 விமானங்களுக்கு ஈடானது இது. எனவே விமானங்களை இயக்கும் செலவு மிச்சமாகிறது.
20000 கட்டுமான தொழிலாளர்களுக்கு இத்திட்டம் பணி அளிக்க உள்ளது. திட்டம் தொடங்கிய பிறகு நேரடியாக 4000 பேருக்கும், மறைமுகமாக 16000 பேருக்கும் வேலை வாய்ப்பை தரப்போகிறது இந்த திட்டம்.