மீண்டும் வரிந்து கட்டி வரும் பீட்டா... ஜல்லிக்கட்டில் மிருகவதை நடந்ததாக புகார்
ஜல்லிக்கட்டில் மிருகவதை நடந்துள்ளதாக பீட்ட அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
டெல்லி: ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் போது காளைகள் துன்புறுத்தப்பட்டதாக பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான ஆதாரத்தை உச்சநுதிமன்றத்தில் அளிக்கவுள்ளதாவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற தடை காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு எப்படியாவது ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தியே தீர வேண்டும் என சென்னை மெரினா உட்பட தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் விளைவாக குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தமிழக சட்டசபையில் அவசர சட்டம் இயற்றினார். பின்னர் அந்த் அவசரச் சட்டம் சட்டமாக்கப்பட்டது.
இந்த ஆண்டுதான் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது
இந்தச்சட்டம் அரசிதழிலும் வெளிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அலங்காநல்லூர், அவனியாபுரம் உட்பட தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ள பீட்டா
இந்நிலையில் ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பு தற்போது மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் இந்திய தலைவர் பூர்வா ஜோஷிபுரா டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார்.
மிருகவதை நடந்துள்ளது
அப்போது ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்பட்டு மிருகவதை நடந்துள்ளது என்று அவர் குற்றம்சாட்டினார்.ஜல்லிக்கட்டில் நடந்த மிருகவதை பற்றிய ஆதாரங்களை திரட்டி வருகிறோம் என்றும் அவர் கூறினார்.
ஆதாரங்களை கொடுப்போம்
தற்போது நடந்த ஜல்லிக்கட்டில் அதிகளவு மிருகவதை நடந்துள்ளது என்ற அவர் மிருகவதை குறித்த ஆதாரங்களை விரைவில் உச்சநீதிமன்றத்தில் வழங்குவோம் என்றும் அவர் மிரட்டியுள்ளார். பல பிரபலங்களின் ஆதரவு பீட்டாவுக்கு உள்ளது என்றும் பீட்டா அமைப்பின் இந்தியத்தலைவர் பூர்வா ஜோஷிபுரா கூறியுள்ளார்.