சுத்துது ஆவி... புராரியை அச்சுறுத்தும் பீதி... வீடு தோறும் பூஜை.. வீட்டு மதிப்பும் சரிந்தது!
Recommended Video
டெல்லி: டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் செத்தாலும் செத்தார்கள், அந்த ஏரியாவே கதி கலங்கிப் போய்க் கிடக்கிறது. ஆவி பயத்தில் அங்கு வசிப்போர் வீடுகளில் கணபதி பூஜை உள்ளிட்டவற்றை செய்கின்றனர். அப்பகுதியில் வீடுகளின் மதிப்பும் இறங்கி விட்டது.
11 பேரின் மரணம் குறித்து பற்பல தகவல்கள் பரவி வருவதாலும், இவர்கள் ஆவிகளாக சுற்றக்கூடும் என்று மக்கள் அஞ்சுவதாலும் இப்பகுதியில் வீடுகளின் மதிப்பு இறங்கி விட்டதாக ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் புலம்புகின்றனர்.
குறிப்பாக 11 பேரின் வீடு உள்ள சந்த் நகர் பகுதியில்தான் வீடுகளை விற்பதும், வாங்குவதும் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளதாம். மறுபக்கம் அந்த வீட்டுக்கு அக்கம் பக்கத்தில் வசிப்போர் ஆவி பயத்தில் பூஜைகளைப் போட்டபடி உள்ளனராம்.
பின் வீட்டு தியாகியின் பீதி
இறந்து போன 11 பேர் வசித்து வந்த வீட்டுக்கு பின் வீட்டில் குடியிருந்து வருபவர் குமார் தியாகி. இவர் தனது வீட்டில் விரைவில் பெரிய அளவில் பூஜை போடவுள்ளாராம். எல்லாம் ஆவி பயம்தானாம். இவர் ஒரு வீடு புரோக்கர் ஆவார்.
ஆவி அடிச்சுடக் கூடாது
எனக்கு மூட நம்பிக்கையெல்லாம் இல்லை. ஆனால் வீட்டை சுத்தப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். ஏதாவது கெட்டது இருந்தால் வீட்டை விட்டு போய் விடும். எனது கல்லூரி செல்லும் மகள் பெரும் பீதியுடன் உள்ளார். இந்த பூஜை அவரையும் அமைதிப்படுத்தும் என்று கூறுகிறார் தியாகி.
வீடு விற்பதில்லை
தியாகி மேலும் கூறுகையில் செத்துப் போன பாட்டியா குடும்பத்தினர் வீட்டுக்கு அருகில் உள்ள வீடுகள் இனி விற்பனையாகாது. யாரும் வாங்க மாட்டார்கள். அந்த அளவுக்கு மக்கள் பீதியடைந்துள்ளனர். அதேசமயம், சற்று தொலைவில் உள்ள வீடுகளுக்குப் பாதிப்பு இருக்காது என்றார்.
மோசமான தற்கொலை
ஜூலை 1ம் தேதி பவனேஷ் பாட்டியா மற்றும் அவரது தாயார் உள்ளிட்ட குடும்பத்தினர் கூண்டோடு தற்கொலை செய்து கொண்டனர். நேராக சொர்க்கத்திற்கு செல்வதற்காக மரணத்தை நாடியுள்ளனர் அவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இவர்களது மரணம் குறித்து தினசரி ஒரு பரபரப்பு தகவல் தொடர்ந்து வெளியாகிய வண்ணம் உள்ளது. இதனால்தான் இப்பகுதியில் பீதி தொடர்கிறது.
இது முதல் முறையல்ல
இதுபோற பீதியால் சொத்து மதிப்பு குறைவது இது முதல் முறையல்ல. இப்படித்தான் நொய்டாவில் முன்பு நித்தாரி படுகொலைகள் வெளியானபோது அந்த வீடு பேய் வீடாக மக்களால் முத்திரை குத்தப்பட்டது. அந்த வீட்டை யாரும் வாங்க முன்வரவில்லை. அதேபோல காஸியாபாத்தில் 2013ல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை செய்து கொண்டனர். அந்த வீடும் விற்காமல் பின்னர் இடித்துத் தள்ளப்பட்டது. இப்போது புராரியில் அதே நிலை திரும்பியுள்ளது.