பணத்தை விட்டுவிட்டு 75 கிலோ தக்காளியை மட்டும் 'ஆட்டைய போட்ட' கொள்ளையர்கள்!!
ஜெய்ப்பூர்: பணத்தைவிட விலை மதிப்புள்ள பொருளாகிவிட்டது தக்காளி.. ராஜஸ்தான் மாநிலத்தில் சந்தைப் பகுதியில் 21 கடைகளில் நுழைந்த திருடர்கள் பணத்தை விட்டுவிட்டு 75 கிலோ தக்காளியை மட்டும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
அண்மைக்காலமாக தக்காளியின் விலைதான் அனைவரையும் மிரட்டி வருகிறது. இதனால் தக்காளியை பார்த்தாலே அச்சம்தான் ஏற்பட்டு வருகிறது.
சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ80 முதல் ரூ100 வரை விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை விட தக்காளி விலைதான் பெரும்பாடுபடுத்தி வருகிறது.
ராஜஸ்தான் கொள்ளை
இதனால்தான் என்னவோ பணத்தை கொள்ளையடிப்பதைவிட தக்காளிக்கு குறி வைக்கிறார்கள் போல கொள்ளையர்கள்.. ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவமே இதற்கு சாட்சி..
தக்காளி மட்டுமே கொள்ளை
அம்மாநிலத்தின் டயூசா மாவட்டத்தில் கொட்வாலி போலீஸ் நிலையம் அருகே சாப்ஸி மண்டி உள்ளது. இந்த மண்டிக்குள் நுழைந்த கொள்ளையர்கள் 21 கடைகளின் பூட்டை உடைத்து கடைகளில் இருந்த தக்காளியை மட்டும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
பணத்தை தொடாத கொள்ளையர்கள்
ஆனால் கடைகளில் கல்லாவில் இருந்த பணம் எதுவுமே திருடப்படவில்லை. தக்காளிகளை குறிவைத்தே கொள்ளையர்கள் வந்துள்ளனர்.
75 கிலோ தக்காளி கொள்ளை
மொத்தம் 75 கிலோ தக்காளி கொள்ளையடிக்கப்பட்டிருக்கக் கூடும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
தக்காளி கொள்ளையர்களுக்கு வலை
இதைத் தொடர்ந்து தக்காளி கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.