பெங்களூர்: இரவில் தனியே பயணித்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற அரசு பஸ் டிரைவர்
பெங்களூர்: நாட்டையே உலுக்கிய டெல்லி மருத்துவ மாணவி பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது போன்ற சம்பவம் ஒன்று பெங்களூரில் நடந்துள்ளது. அரசு பேருந்தில் இரவில் தனிமையில் பயணம் செய்த பெண் ஒருவரை அப்பேருந்தின் டிரைவரே பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த சம்பவத்தால் பெங்களூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் நடந்தபோது போல், பெங்களூரில் அரசு பஸ்சில் இரவில் பயணம் செய்த இளம்பெண்ணை பஸ் டிரைவர் பலாத்காரம் செய்ய முயன்றார். அது முடியாமல் போகவே, அந்த பெண்ணை தாக்கி கீழே தள்ளி விட்டு சென்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 13ம் தேதி இரவு பெங்களூர், சாம்ராஜ்பேட்டை சாலையோரம் தலையில் பலத்த காயங்களுடன் கிடந்த இளம்பெண் ஒருவர் போலீசாரால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அளிக்கப் பட்ட தீவிர சிகிச்சைப் பின் மறுநாள் கண் விழித்த அந்த இளம்பெண், நடந்த சம்பவங்களை விவரித்தபோது போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
தனக்கு நடந்தவைகள் என அப்பெண் போலீசிடம் கூறியதாவது:-
நான் பஞ்சாபை சேர்ந்தவள். பத்மநாப நகரில் உள்ள தேவகவுடா பெட்ரோல் பங்க் பகுதிக்கு செல்வதற்காக மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து கடந்த 13ம் தேதி இரவு 11.30 மணிக்கு பனசங்கரிக்கு சென்ற பஸ்சில் ஏறினேன். பஸ்சில் நடத்துனர் இல்லை. டிரைவரே நடத்துனராகவும் செயல்பட் டார்.
பஸ் பனசங்கரி பகுதியை அடைந்ததும் அதில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் இறங்கினர். அப்போது, தேவகவுடா பெட்ரோல் பங்க்குக்கு எப்படி செல்ல வேண்டும் என்று டிரைவரிடம் கேட்டேன். நானும் அந்த வழியாக செல்வதாக கூறிய டிரைவர், அங்கு இறக்கி விட்டு விடுவதாக என்னை அழைத்து சென்றார்.
சாம்ராஜ்பேட்டை அருகே வந்தபோது பஸ்சை திடீரென நிறுத்திய டிரைவர், என்னை பலாத்காரம் செய்ய முயன்றார். அதிர்ச்சி அடைந்த நான், கூச்சல் போட்டு அவருடன் போராடினேன். ஆத்திரம் அடைந்த டிரைவர், என்னை தலையில் தாக்கி பஸ்சில் இருந்து கீழே தள்ளி விட்டார். என் உடைமை களுடன் பஸ்சை எடுத்து சென்று விட்டார். கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்ததால் மயக்கம் அடைந்தேன்' என இவ்வாறு அந்த பெண் தெரிவித்துள்ளார்.
அப்பெண்ணின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய போலீசார், இளம்பெண் பயணம் செய்த பஸ்சை சிக்மகளூர் மாவட்டம், கடூரை சேர்ந்த சித்தார்த் என்பவர் ஓட்டியதை கண்டுபிடித்தனர்.
பெங்களூரில் பதுங்கியிருந்த சித்தார்த்தை நேற்று முன்தினம் இரவு கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும், சம்பவம் நடந்த பஸ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தகவல் அறிந்த அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி பாதிக்கப் பட்ட பெண்ணை மருத்துவமனைக்கு சென்று நேரில் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், ‘‘பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம் செய்யப்படவில்லை, போராட்டத்தில் அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக டிரைவர் சித்தார்த், பிஎம்டிசி போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் பரமேஸ்வரய்யா மற்றும் போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் புட்டராஜூ ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளி மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
டெல்லி மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பே இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில் பெங்களூர் நகரில் அரசுக்கு சொந்தமான பஸ்சில் டிரைவரே இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி சம்பவத்தை அடுத்து பெண்களின் பாதுகாப்புக்காக கர்நாடகாவில் அரசு பஸ்களில் சிசிடிவி கேமரா, ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, பெங்களூரில் 100 அரசு பஸ்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டதாக அறிவிப்புகள் வெளியானது.
அதேபோல், பெண்களுக்கான இருக்கையில் ஆண்கள் அமரவும் கடுமையாக தடை விதிக்கப்பட்டது. ஆனால், பெங்களூரில் நடந்த இந்த பலாத்கார முயற்சி பஸ்களில் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.