கண்முன்னே பாய்ந்த தோட்டாக்கள்... தன்னுயிரைப் பற்றி கவலைப்படாமல் 50 பக்தர்களை காப்பாற்றிய டிரைவர்
தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கண்முன்னே தோட்டாக்கள் சீறிப்பாய்ந்த நிலையில், தன் உயிரைப் பற்றியும் கவலைப்படாமல் 50 யாத்ரீகர்களை பஸ் டிரைவர் காப்பாற்றியுள்ளார். அவருக்கு சமூக வலைதளங்களில்
அமர்நாத்: தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கண்முன்னே தோட்டாக்கள் சீறிப் பாய்ந்த நிலையில், தன் உயிரை துச்சமென நினைத்து பேருந்தை ஓட்டிச் சென்று 50 அமர்நாத் யாத்ரீகர்களை பஸ் டிரைவர் சலீம் காப்பாற்றியுள்ளார். அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் பகுதியில் அமர்நாத் யாத்திரியை முடித்து திரும்பி வந்து கொண்டிருந்த ஆன்மீகப் பயணிகளின் பேருந்தை குறி வைத்து தீவிரவாதிகள் நேற்று இரவு நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
20 பேர் படுகாயம் அடைந்தனர். காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த சில வருடங்களில் நடைபெற்ற மோசமான தாக்குதல் இது என்பதால் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டின் நடுவே தனது உயிரை பணயம் வைத்து பேருந்தில் பயணித்த 50 பேரின் உயிரை டிரைவர் காப்பாற்றியுள்ளார். அவருக்குப் பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
57 பயணிகள் சென்ற அந்த பேருந்தை ஷேக் சலீம் என்ற டிரைவில் ஓட்டி வந்தார். துப்பாக்கி சூடு தொடங்கியதும் டிரைவர் சலீம் பேருந்தை நிறுத்தி இருந்தால் உயிர்பலி எண்ணிக்கை அதிகமாயிருக்கும்.
ஆனால் அவர் பேருந்தை நிறுத்தாமல் பாதுகாப்பான இடத்தை நோக்கி வேகமாக ஓட்டிச் சென்றார். இருட்டான பகுதிக்குள் சென்று பேருந்தினை பத்திரமாக நிறுத்தினார்.
காயமடைந்து மருத்துவமனையில் உள்ள ஒருவர் கூறுகையில், "அனைத்துப் பகுதிகளில் இருந்தும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்தனர். சில நிமிடங்கள் வரை இது தொடர்ந்தது. எங்களுடைய டிரைவர் துப்பாக்கிச் சூட்டை பொருட்படுத்தாமல் சில கிலோமீட்டர் தூரம் பேருந்தை ஓட்டிச் சென்றார். அவர் எங்களை மிக சாதுரியமாகக் காப்பாற்றினார்" என்று தெரிவித்தார் நன்றிப்பெருக்கோடு.