மேகாலயாவில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 30 பேர் பலி: மோடி இரங்கல்
டெல்லி: மேகாலயா மாநிலத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் பலியாகினர். 11 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தின் சில்சார் நகரில் இருந்து நேற்று மாலை குவாஹாட்டி நகருக்கு பேருந்து ஒன்று புறப்பட்டது. சுமார் 40 பயணிகளுடன் இந்தப் பேருந்து மேகாலயா வழியாக நேற்று முன்தினம் இரவு சென்றுகொண்டிருந்தது.
இந்நிலையில் மேகாலயா மாநிலத்தின் கிழக்கு ஜைன்தியா மாவட்டம், சோனாப்பூர் என்ற இடத்துக்கு அருகில் இரவு 9.45 மணியளவில் மிகவும் ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது. இதையடுத்து உள்ளூர் மக்கள் உதவியுடன் போலீஸார் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் மீட்புப் பணிகளை தொடங்கினர்.
இதில் 11 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு, ஷில்லாங் நகர மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்தில் இருந்து இதுவரை 11 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் மழைப்பொழிவு இருப்பதால் மீட்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
மேலும், பேருந்தில் பயணம் செய்தவர்களில் 95 சதவீதம் பேர் உயிரிழந்திருக்கக் கூடும் என்றும் போலீசார் தெரிவித்தனர். அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மோடி இரங்கல்:
விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "மேகாலயா பேருந்து விபத்தில் பலர் உயிரிழந்தது மிகுந்த மன வேதனையை அளித்தது. இறந்தவர்களின் குடும்பத்தினருடன் நானும் பங்கேற்கிறேன். அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்" என்று கூறியுள்ளார்.