ராஜஸ்தானில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. பலி எண்ணிக்கை 32ஆக உயர்வு!
ராஜஸ்தானில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சவாய் மதோபூர் மாவட்டத்தில் பனாஸ் ஆறு பாய்கிறது. இன்று காலை சவாய் மதோப்பூரில் லால்காட்டுக்கு பேருந்து ஒன்று 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது.
துபி என்ற இடத்தில் பனாஸ் ஆற்றின் பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. ஓட்டுநர் எவ்வளவோ போராடியும் பேருந்து பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு ஆற்றில் பாய்ந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் இந்த விபத்தில் 27 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 5 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.