ஆந்திராவில் ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து... 8 பேர் பலியான பரிதாபம்
ஆந்திரவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஹைதராபாத்: ஆந்திராவில் ஆற்றில் கவிழ்ந்து சொகுசு பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புவனேஷ்வரில் இருந்து ஆந்திர மாநிலம் ஹைதராபாத்துக்கு தனியார் சொகுசு பேருந்து ஒன்று 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. ஒடிசாவில் இருந்து 1000 கிலோ மீட்டரை கடந்த அந்த பேருந்து விஜயவாடாவில் சிறிது நேரம் நிற்க வேண்டும்.
ஆனால் பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தமால் சென்றுள்ளார். காலை 5.30 மணிக்கு விஜயவாடா அருகே மல்லபாடு என்ற இடத்தில் பாலத்தின் மீது சென்றபோது தடுப்புச்சுவர் மீது மோதிய பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் அப்பகுதி மக்கள் துனையுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் 8 பேரு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் நந்திகமா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.