நேரம் சரியில்லாத நேரத்தில் முதலீட்டை எதிர்பார்த்து சவுதிக்கு செல்லும் மோடி
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியா சுற்றுப்பயணத்தின்போது பாதுகாப்பை மேம்படுத்துவது மற்றும் முதலீடுகளை பெருக்குவது குறித்து கவனம் செலுத்த உள்ளாராம். சவுதியின் நிலைமை சரியில்லாத நேரத்தில் அவர் முதலீடை எதிர்பார்த்து செல்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி முதன் முதலாக சவுதி அரேபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அண்மை காலமாக இந்தியா, சவுதி இடையேயான உறவு வலுப்பட்டுள்ளது. மேலும் தீவிரவாதத்தை ஒழிப்பதிலும் இரு நாடுகள் கூட்டாக சேர்ந்து செயல்படுகின்றன. பாதுகாப்பு தொடர்பாக இருநாடுகள் இடையேயான உறவு நினைத்ததை விட வலுவாகியுள்ளது.
இந்நிலையில் நாளை ரியாத் செல்லும் மோடி இரு நாடுகள் இடையேயான பாதுகாப்பு குறித்த உறவை மேம்படுத்துவது, முதலீடுகளை அதிகரிப்பது குறித்து அந்நாட்டு தலைவர்கள், தொழில் அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்படுகிறது.
சவுதி மன்னர் அப்துல்லா பின் அஜீஸ் இறந்தபோது இந்திய அரசு ஒரு நாள் துக்கம் அனுசரித்ததுடன் துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரியை ரியாத்திற்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில் மோடி நாளை மற்றும் நாளை மறுநாள் சவுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
சவுதியே ஏற்கனவே தீவிரவாத பிரச்சனை, எண்ணெய் விலை சரிவால் நெருக்கடியில் உள்ளது. இந்நிலையில் மோடி முதலீட்டை எதிர்பார்த்து அங்கு செல்கிறார். மோடி தனது சவுதி பயணத்தின்போது இருநாட்டு உறவுகள் தவிர ஐஎஸ்ஐஎஸ் பிரச்சனை குறித்தும் ஆலோசிக்க உள்ளார்.
மூன்று நாடுகளின் சுற்றுப்பயணத்தில் முதலில் பெல்ஜியம் சென்ற மோடி தற்போது அமெரிக்காவில் உள்ளார். நாளை அமெரிக்காவில் இருந்து சவுதி செல்கிறார்.