வெளிப்படைத்தன்மை, நேர்மை பறிப்பு.. கட்சிகளுக்கான வெளிநாட்டு நன்கொடைகளுக்கு இனி தடையில்லை!
Recommended Video
டெல்லி: கட்சிகளுக்கு வெளிநாட்டு நிதிகளும் எளிதாக வரும் வகையில் சட்டத்திருத்தம் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது பாஜகவின் தேர்தல் பேச்சுகளுக்கு எதிரான செயலாகும்.
வெளிநாட்டு நன்கொடை (ஒழுங்குமுறை) சட்டம் 2010ன்படி, இந்திய அரசியல் கட்சிகளுக்கு வெளிநாட்டு நிதி தடுக்கப்பட்டது. ஆனால், இப்போது, கட்சிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாத நிலை உருவாகியுள்ளது.
வெளிநாட்டு நிதிகளுக்கு கட்சிகள் இனி எந்த கேள்விகளுக்கும் உட்படாது. சட்ட விரோத பண பரிவர்த்தனை உட்பட.
வெளிநாட்டு தலையீடு
ஜனநாயக நாட்டில் இதுபோன்ற ஒரு திறந்தவெளி நிதி நன்கொடை உருவாக்கப்பட்டுள்ளது நல்லதல்ல என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இந்திய தேர்தல் முறையில் வெளிநாட்டு தலையீடு ஏற்பட இது வாய்ப்பளிக்கும்.
இரு கட்சிகளுமே ஒன்றுதான்
இருப்பினும் எதிர்ப்பு ஏதுமின்றி, விவாதங்கள் இன்றி இந்த சட்ட திருத்தம் லோக்சபாவில் செய்யப்பட்டுள்ளது. பாஜகவோ அல்லது காங்கிரசோ இரு கட்சிகளுமே இதில் இணைந்து செயல்பட காரணம் அவை ஒரே 'குட்டையில்தான் தண்ணீர்' குடிக்கின்றன. அந்த 'தண்ணீரும் சுவையாக' இருக்கிறது. எனவேதான் சத்தமேயில்லாமல் இப்படி ஒரு சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
ஒரே நிறுவனம் நன்கொடை
2004-2012 வரை காங்கிரசுக்கு ரூ.879 லட்சமும், பாஜகவுக்கு ரூ.790 லட்சமும் லண்டனை சேர்ந்த வேதானந்தா ரிசோர்ஸ் நிறுவனம் மூலம் நன்கொடையாக வந்துள்ளது என்று தெரியவந்தது. இதனால் டெல்லி ஹைகோர்ட் இரு கட்சிகளுமே விதிமுறையை மீறியதாக தெரிவித்திருந்தது. இந்த சட்ட திருத்தம் மூலம், இந்த விதிமுறை மீறல் இப்போது சட்டத்திற்கு உட்பட்டதாக கொண்டுவரப்பட்டுள்ளது. இது ஒரு உதாரணம்தான்.
எப்படியெல்லாம் சட்டத்தை மாற்றுகிறார்கள்
வெளிநாட்டு நிதி சட்டத் திருத்தத்தில் இரு விஷயங்கள் முக்கியமானவை. ஒன்று, கார்பொரேட் நிறுவனங்கள் தங்கள் சராசரி நிகர லாபத்தில் 7.5 சதவீதத்திற்கு மிகாமல்தான் நன்கொடை வழங்க வேண்டும் என்பது தளர்த்தப்பட்டுள்ளது, எந்த கட்சிக்கு கார்பொரேட்டுகள் நன்கொடை வழங்குகின்றன மற்றும் அவர்கள் லாப நஷ்ட கணக்குகளும் வெளியே காட்டப்பட வேண்டியதில்லை என்கிறது இந்த சட்ட திருத்தம். இதன் மூலம், கார்பொரேட்டுகளிடமிருந்து அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது.