வரும் மார்ச் மாதத்திற்குள் நாட்டில் 90% மக்கள் ஜியோ வாடிக்கையாளர்களாக இருப்பார்கள்: முகேஷ் அம்பானி
மும்பை: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ சேவை வரும் 5ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அந்த நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி மும்பையில் இன்று தெரிவித்தார்.
டிசம்பர் இறுதிவரை, அழைப்புகள் அனைத்தும் இலவசம் என்றும் இணையதள சேவைக்கான கட்டணம், உலகிலேயே மிகவும் குறைவு என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
மும்பையில் இன்று நிருபர்கள் மத்தியில் முகேஷ் அம்பானி மேலும் கூறியதாவது: ஜியோ நெட்வொர்க் திட்டத்தை நாட்டு மக்களுக்கும், பிரதமர் மோடிக்கும் அர்ப்பணிக்கிறேன்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள், நாட்டு மக்களில் 90 சதவீதம் பேர் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களாக மாற்றப்படுவார்கள். இந்தியாவை உலகின் மிக குறைந்த, இணையதள கட்டண நாடாக மாற்றுவோம்.
இன்றைய டிஜிட்டல் உலகில், டேட்டாதான் ஆக்சிஜன் போன்றது. அந்த ஆக்சிஜனை நாங்கள் குறைந்த கட்டணத்தில் வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம்.
பிற செல்போன் சேவை நிறுவனங்கள் ஒரு ஜி.பி. டேட்டாவை 250 ரூபாய் என்ற அளவில் தரும் நிலையில், உலகிலேயே குறைந்த கட்டணமாக, 1 ஜி.பி. டேட்டாவை ஜியோ 50 ரூபாய்க்கு தர உள்ளது.
இதுவரை இந்தியா காந்திகிரியை புகழ்ந்து வந்தது. இப்போது டேட்டா-கிரி காலம். வெல்கம் ஃஆபர் என்ற பெயரில் ஜியோ தரும் சலுகை செப்.5 முதல் டிச.31வரை அமலில் இருக்கும். அக்காலகட்டத்தில் அனைத்து சேவைகளுமே இலவசம்தான்.
ஜியோ 4G டேட்டா ரூ.149 (28 நாட்களுக்கு) என்ற விலையில் தொடங்குகிறது. 300 எம்.பிக்கள் வழங்கப்படும். மாதம் ரூ. 499 என்ற திட்டத்தில் இணைந்தால் ஒரு 28 நாட்களுக்கு 1 ஜிபி டேட்டா வழங்கப்படுவதோடு, இரவு நேரத்தில் அளவில்லாத அளவுக்கு 4ஜி டேட்டாவை பயன்படுத்த முடியும்.