இடைத் தேர்தல்களில் பாஜக தோற்க காரணம் என்ன? எதிர்க்கட்சிகள் சொல்வதை பாருங்கள்
Recommended Video
டெல்லி: நடந்து முடிந்த 11 சட்டசபை மற்றும் 4 லோக்சபா இடைத் தேர்தல்களில் பாஜக பெற்றுள்ள பெரிய தோல்வி என்பது ஜனநாயகத்திற்கு கிடைத்துள்ள வெற்றி என்று எதிர்க்கட்சிகள் ஒரே குரலில் கூறி வரும் நிலையில், அக்கட்சியோ நாங்கள் பதுங்குவதே பாய்வதற்குத்தான் என கூறி வருகிறது.
திங்கள்கிழமை நடைபெற்ற இடைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நேற்று வெளியாகியிருந்தன. அதில் சட்டசபை தொகுதிகளில் ஒன்றையும், லோக்சபா தொகுதிகளில் ஒன்றையும் மட்டுமே பாஜகவால் வெல்ல முடிந்தது.
மகாராஷ்டிராவில் பாஜகவும் மற்றும் நாகாலாந்தில் பாஜக கூட்டணி கட்சியும் தலா 1 லோக்சபா தொகுதியை கைப்பற்றியுள்ளன.
பாஜக தொகுதி
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உத்தர பிரதேசத்தின் கைரானா தொகுதியில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ககளம் கண்ட ராஷ்டிரிய லோக்தள் வேட்பாளர் தபசம் ஹசன் வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதி, பாஜக எம்.பி. ஹுகும் சிங் காலமானதால் காலியான தொகுதியாகும். பாஜக சார்பில் அவரது மகன் ம்ரிகங்கா சிங் களமிறக்கப்பட்டார். அப்படியும் வெற்றி பெற முடியவில்லை.
அகிலேஷ் யாதவ்
இதுபற்றி அகிலேஷ் யாதவ் கூறுகையில், ஜனநாயகம் வென்றுள்ளது. சமூக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்றார். மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், வெறுப்பு அரசியல், மதவாத அரசியலால் பாஜக தோற்றுள்ளது. கைரானாவில் அடைந்த தோல்வி என்பது ஆளும் கட்சியின் அரசியலை மக்கள் விரும்பவில்லை என்பதன் அறிகுறி என்றார்.
கேஜ்ரிவால் கோபம்
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறுகையில், மோடி அரசு மீதான மக்களின் கோபம் இந்த தோல்விகளால் வெளிப்பட்டுள்ளது என்றார். ஆனால் பாஜகவோ இந்த தோல்வியை வேறு மாதிரி கையாளுகிறது. இந்த தோல்வி குறித்து வேறு காரணங்களை பாஜக கூறுகிறது.
பதுங்குவது பாய்வதற்காம்
பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில், பிரதமர் அல்லது முதல்வருக்காக இடைத் தேர்தல்களில் மக்கள் வாக்களிப்பதில்லை. அந்தந்த தொகுதிகளில் உள்ள பிரச்சினைகள் அடிப்படையில்தான் வாக்களிப்பார்கள். எனவே இதை மத்திய, உத்தர பிரதேச மாநில ஆட்சிகளுக்கான மதிப்பெண்ணாக பார்க்க முடியாது என்றார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கோ, பாய்வதற்கு முன்பாக 2 அடி பின்நோக்கி வைப்பது வழக்கம். பாஜக இனி பெரிய பாய்ச்சலை காட்டப்போகிறது என்று தெரிவித்துள்ளார்.
மமதா பானர்ஜி திட்டம்
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறுகையில், பாஜகவின் இறுதி காலம் தெளிவாக தெரிகிறது. ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகள் என்ற எனது திட்டம் பலனளிக்க தொடங்கிவிட்டது. மாயாவதி, அகிலேஷ் யாதவ், அஜித் சிங் இணைந்து தேர்தலை எதிர்கொண்டால் உத்தர பிரதேசத்தில் லோக்சபா தேர்தலின்போது பாஜக பெரும் தோல்வியை சந்திக்கும். பீகாரில் லாலு பிரசாத் யாதவை சிறையில் அடைத்த பிறகும் கூட ராஷ்டிரிய ஜனதாதளத்தை தோற்கடிக்க முடியவில்லை என்றார் மமதா பானர்ஜி.