'ஏர்செல்' சிவசங்கரன் திவாலானவர்: செஷல்ஸ் நீதிமன்றம் பிரகடனம்!
டெல்லி: வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபரான சிவசங்கரன் திவாலானதாக செஷல்ஸ் நீதிமன்றம் பிரகடனப்படுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரன் தன் வசம் இருந்த ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய நேரிட்டது. இது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது.
இதேபோல பாரிஸ்டா காபி சங்கிலித் தொடர் நிறுவனங்களையும் இவர் விற்பனை செய்துள்ளார். தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி பங்குகளை சிவசங்கரன் விற்பனை செய்ததில் பெரும் பிரச்சினை எழுந்தது. இப்படி மிகப் பெரும் தொழில்களை வாங்குவது மற்றும் அவற்றை விற்பனை செய்வதை வழக்கமாகக் கொண்டவர் சிவசங்கரன்.
எஸ்டெல் -ல் பாடெல்கோ நிறுவனம்
இதனடிப்படையில் 2009-ம் ஆண்டு பஹ்ரைனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பாடெல்கோ நிறுவனம் சிவசங்கரனுக்கு சொந்தமான எஸ்டெல் நிறுவனத்தின் 42.7% பங்குகளை வாங்கியது.
மீண்டும் பங்குகளை வாங்கிய சிவசங்கரன்
2011-ம் ஆண்டு அக்டோபரில் எஸ்-டெல் நிறுவனத்தில் பாடெல்கோ நிறுவனத்துக்குச் சொந்தமாக உள்ள பங்குகளைத் திரும்ப வாங்கிக் கொள்வதாக சிவசங்கரன் தெரிவித்தார்.
டாடா நிறுவன பங்குகள்
இதனிடையே 2012-ம் ஆண்டு அக்டோபரில் 7.90 கோடி டாடா டெலி நிறுவனப் பங்குகளை பஹ்ரைன் நிறுவனத்துக்கு மாற்றினார் சிவசங்கரன். இதற்கு பாடெல்கோ நிறுவனமும் ஒப்புக் கொண்டது. ஆனால் டாடா டெலி நிறுவன பங்குகளை மாற்றுவதற்கான ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
பணம் தராத சிவசங்கரன்
இதில் ஏற்பட்ட கால தாமத காலத்தில் டாடா டெலி பங்குகள் கடுமையாக சரிந்தன. இதனால் எதிர்பார்த்த அளவுக்கு பணம் கிடைக்கவில்லை. பாடெல்கோவுக்கு சிவசங்கரன் தரப்பு தர வேண்டிய தொகையும் தரப்படவில்லை.
பாடெல்கோ வழக்கு
தங்களுக்கு ஒப்புக் கொண்டபடி பணத்தைத் திருப்பித் தராததால் பாடெல்கோ நிறுவனம் இது தொடர்பாக பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் சிவசங்கரன் மீது வழக்கு பதிவு செய்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 21.20 கோடி டாலரை கடந்த ஜூன் 26 க்குள் சிவசங்கரன் அளிக்கவேண்டும் என தீர்ப்பளித்தது.
சொத்து முடக்க உத்தரவு
ஆனால் பணத்தை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அளிக்க சிவசங்கரன் தவறியதால் அவரது சர்வதேச சொத்துகளை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
திவால் மனு
இதனிடையே ஆகஸ்ட் மாதம் தான் திவாலாகிவிட்டதாக செஷல்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் சிவசங்கரன். அந்நாட்டு குடியுரிமையை பெற்றிருப்பதால் செஷல்ஸ் நீதிமன்றத்தில் அவர் இம்மனுவைத் தாக்கல் செய்தார்.
திவாலானவர் பிரகடனம்
இதை ஏற்று அந்நாட்டு சட்டப்படி சிவங்கரன் திவாலானதாக அறிவிக்கப்படுகிறது. திவாலானவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் செஷல்ஸ் நீதிமன்றம் அறிவித்தது.
அதிகாரி நியமனம்
சிவசங்கரனின் சொத்து மற்றும் அவரது நிதி பரிவர்த்தனை குறித்த விவரங்களை ஆராய அதிகாரபூர்வ மேலாளராக பெர்னார்ட் பூல் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மூன்று மாதங்களில் இது குறித்து அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்.
நம்பிக்கையோடு பாடெல்கோ
நீதிமன்றத்த்தின் இந்தத் தீர்ப்பால் தங்கள் நிறுவனத்துக்கு கிடைக்க வேண்டிய தொகை எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்று பாடெல்கோ தலைமை அதிகாரி ஆலன் வீலன் தெரிவித்துள்ளார்.