ஜார்கண்டில் தொங்கு சட்டசபை.. காங்கிரஸ் கூட்டணிக்கு அதிக இடங்கள்- சி வோட்டர் அதிரடி எக்ஸிட் போல்
டெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது, தொங்கு சட்டசபை அமையும், அதேநேரம் காங்கிரஸ் கட்சி அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி தனிப்பெரும் கூட்டணியாக உருவெடுக்கும் என்று சி வோட்டர் எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள 81 தொகுதிகளுக்கு மொத்தம் ஐந்து கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் இன்றுடன் நிறைவு பெற்றது.
இதையடுத்து எக்ஸிட் போல் ஏஜென்சிகள் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் மாலை 6.30 மணிக்கு பிறகு ஒன்றொன்றாக வெளியாக தொடங்கியுள்ளன.
சி வோட்டர் என்பது பிரபல ஏஜென்சியாகும். இது நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி 35 தொகுதிகளை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பாஜக கூட்டணி 32 தொகுதிகளை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா 3, ஏஜேஎஸ்யூ 5, பிறர் 6 தொகுதிகளை வெல்ல வாய்ப்பு உள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க குறைந்தபட்சம் 41 தொகுதிகளில் வெல்ல வேண்டியது அவசியம் என்பதால், இங்கு தொங்கு சட்டசபை அமையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் கூட்டணி உருவாகும் என்பதால், ஆட்சி அமைக்கும் உரிமை அவர்களுக்கே, கிடைக்கும். பிற கட்சிகளை கூட்டணிக்குள் அழைத்துக் கொண்டு ஆட்சியமைக்க காங்கிரசால் முடியுமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.