குடியுரிமை திருத்த சட்டம்.. மே.வங்கம், டெல்லி, அஸ்ஸாம் சட்டபை தேர்தலில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தமானது மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் டெல்லி சட்டசபை தேர்தல்களில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன. அஸ்ஸாம், மேகாலயா, திரிபுராவில் ஒருவாரமாக இப்போராட்டங்கள் நீடிக்கின்றன.
இந்த போராட்டங்கள் வன்முறையாகவும் வெடித்துள்ளன. இந்நிலையில் மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளா ஆகிய மாநிலங்கள் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தப்போவதில்லை என அறிவித்துள்ளன.
இந்நிலையில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது டெல்லி. இம்மாநிலத்தைப் பொறுத்தவரையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்தோர் பல்லாயிரக்கணக்கில் இருக்கின்றனர். இவர்களுக்கான பல காலனிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
உதயநிதியை கைது செய்ய சென்ற போலீஸ்.. தடுத்து வாக்கு வாதம் செய்த தொண்டர்கள்.. சென்னையில் பரபரப்பு!
டெல்லியில் பாஜகவுக்கு சாதகம்
இந்த இடம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை கிடைப்பதன் மூலம் இவர்களது வாக்குகளை அறுவடை செய்ய முடியும் என நினைக்கிறது பாஜக. இதை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது சவாலான ஒன்றுதான்.
மே.வங்கத்துக்கு 2021 தேர்தல்
மேற்கு வங்கத்துக்கு தமிழகத்தைப் போல 2021-ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அஸ்ஸாமிலும் 2021-ல் தான் தேர்தல் நடைபெற இருக்கிறது.
55 லட்சம் பேர் இடம்பெயர்ந்தோர்
2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பிற மாநிலங்களில் இருந்து மற்றும் அண்டை நாடுகளில் இருந்தும் இடம்பெயர்ந்து மேற்கு வங்கத்தில் குடியேறியவர்கள் எண்ணிக்கை சுமார் 55 லட்சம் பேர். இது மேற்கு வங்க மக்கள் தொகையில் 7%.
வங்க இந்து அகதிகள்
ஏற்கனவே மேற்கு வங்க முஸ்லிம்கள் மற்றும் வங்கதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள், முதல்வர் மமதாவின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸின் வாக்கு வங்கியாக உள்ளனர். இந்த வாக்கு வங்கியை சமன்செய்யும் வகையில் வங்கதேச இந்து அகதிகள் உள்ளனர். இவர்களைத்தான் பாஜக குறிவைத்திருக்கிறது.
பாஜகவுக்கு கை கொடுக்கும்?
தற்போதைய நிலையில் திரிணாமுல் காங்கிரஸுக்கு சவாலாக இருப்பது பாஜகதான். ஆகையால் குடியுரிமை சட்ட திருத்தம் என்பது பாஜகவுக்கு பெருமளவு கை கொடுக்க இருக்கிறது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றக் கூடிய அளவுக்கும் இது பெரும் பலத்தையும் தரலாம் எனவும் கூறப்படுகிறது.
அஸ்ஸாம் பற்றி எரிகிறது
டெல்லி. மேற்கு வங்க நிலைமைகளைப் போல அஸ்ஸாம் களநிலவரம் இல்லை. அஸ்ஸாமில் அன்னியர் குடியேற்றப் பிரச்சனை என்பது 1970களில் வெடித்தது. இதன் தொடர்ச்சியாகத்தான் 1985-ல் ராஜீவ் பிரதமராக இருந்த போது அஸ்ஸாம் ஒப்பந்தம் கையெழுத்தானது.
சர்ச்சையான குடியேற்ற பதிவேடு
அஸ்ஸாமைப் பொறுத்தவரையில் அன்னியர் குடியேற்றத்தால்தான் தனிநாடு கோரிக்கையே எழுந்தது. உல்பா போன்ற மாணவர் அமைப்புகள், மக்களின் பேராதரவுடன் ஆட்சியை அமைத்தன. இதன் நீட்சியாகத்தான் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைப்படுத்தப்பட்டது. அதில் சுமார் 12 லட்சம் இந்துக்களும், 7 லட்சம் முஸ்லிம்களும் போதுமான ஆவணங்கள் இல்லாமல் இருந்தது தெரியவந்தது.
1980களின் போராட்டம்
இதனை சரிசெய்யும் வகையில்தான் குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த குடியுரிமை சட்ட திருத்தத்தை அஸ்ஸாம் மீண்டும் 1980களைப் போல உக்கிரமாக எதிர்த்து போராடி வருகிறது. அஸ்ஸாமில் பிற மாநிலத்தவர் குறிவைக்கப்பட்டு தாக்கப்படும் அபாயம் உருவாகி உள்ளது. அதைவிட பாஜகவினர் மிகப் பெரும் அச்சத்தில் இருப்பதைத்தான் அண்மைய சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன.
அஸ்ஸாமில் காத்திருக்கும் சவால்
இதனால் அஸ்ஸாம் தேர்தல் களத்தை பாஜக எதிர்கொள்வது என்பது மிகப் பெரும் சவாலாக இருக்கப் போகிறது. அஸ்ஸாம் மக்களின் தேசிய இன உணர்வின் வெளிப்பாடாகவே 2021 தேர்தல் முடிவுகள் இருக்கும் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.