பயங்கரவாதத்தில் பலியானால் இழப்பீடு ரூ.5 லட்சமாக அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: பயங்கரவாதம் மற்றும் வகுப்புவாத வன்முறையால் உயிரிழக்கும் அப்பாவி மக்களுக்கு வழங்கப்படுகிற இழப்பீட்டை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. எல்லை தாண்டிய துப்பாக்கிச்சூடு, கண்ணிவெடி தாக்குதல், குண்டுவீச்சு, குண்டுவெடிப்பு, பயங்கரவாத தாக்குதல்கள், நக்சலைட் மற்றும் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் போன்றவற்றில் உயிரிழக்கும் அப்பாவி மக்களுக்கு வழங்கப்படுகிற இழப்பீட்டை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது உடனடியாக அமல் அமல்படுத்தப்பட்டது. தாக்குதல்களில் உயிரிழக்கும் நபர்களின் குடும்பத்தினருக்கு இந்த இழப்பீடு அளிக்கப்படும்.
அதேபோல, மேலே குறிப்பிடப்பட்ட தாக்குதல்களில் சிக்கி, 50 சதவீதம் அல்லது அதற்கு மேல் ஊனம் அடைகிறவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இதுவரை ரூ.3 லட்சம் மட்டுமே இழப்பீடாக பெற்று வந்த நிலையில், இழப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு முதல் பயங்கரவாதத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இதுவரை ரூ.35.89 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதாம்.