மத்திய அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது 65 ஆக உயர்வு.. ஒப்புதல் அளித்தது அமைச்சரவை!
மத்திய அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது 65 ஆக உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
டெல்லி : மத்திய அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 60ல் இருந்து 65 ஆக உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து டெல்லியில் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது : தற்போது மத்திய அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உள்ளது. இதனை 65 வயதாக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரப் பணியில் உள்ள மருத்துவர்கள் தவிர எஞ்சிய மருத்துவர்களுக்கு இது பொருந்தும்.
கடந்த ஜூலை மாதத்தில் மத்திய ஆயுதப் படையில் மருத்துவப் பணியில் உள்ளவர்களின் ஓய்வு பெறும் வயது 60ல் இருந்து 65ஆக உயர்த்தப்பட்டது. மருத்துவர்களின் அனுபவம் மற்றும் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு மத்திய அமைச்சரவை இந்த முடிவு எடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த ஆர்மி கன்டோண்ட்மென்ட் பகுதிகளில் டவர்களை நிறுவ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இந்தியா-எத்தியோபியா இடையேயான தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.