வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் மெட்ரோ விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரையான மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து ரூ.713 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
சென்னையில் 2 வழித் தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. வண்ணாரப்பேட்டையில் தொடங்கி உயர் நீதிமன்றம், அண்ணா சாலை, சைதாப்பேட்டை வழியாக விமான நிலையம் வரை 24 கி.மீ. தொலைவுக்கு முதல் பாதையும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அண்ணா நகர், திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி, ஆலந்தூர் வழியாக பரங்கிமலை வரை 22 கி.மீ. தொலைவுக்கு 2வது பாதையும் அமைக்கப்பட்டு வருகிறது.
இரு வழித்தடத்திலும் சுரங்கப்பாதை மற்றும் உயர்த்தப்பட்ட பாதை வழியாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதில், முதல்கட்டமாக கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை பணிகள் முடிந்து மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதையடுத்து, வண்ணாரப்பேட்டை யில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் பாதையை விரிவுபடுத்த ஆய்வு நடத்தி மாநில அரசின் ஒப்புதல் பெறப்பட்டது. பிறகு சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் மத்திய அரசுடன் 3 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், டெல்லியில் நேற்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு சார்பில் ரூ.713 கோடி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசிடம் இருந்து ரூ.916 கோடியும், கடன்வசதி மூலம் 2,141 கோடி திரட்டவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த வழித்தடம் மொத்தம், 9.051 கி.மீ தூரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.