அன்னிய முதலீட்டு வாரியம் கலைப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அந்நிய முதலீட்டு வளர்ச்சி வாரியத்தை கலைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி: அந்நிய முதலீடுகள் பெறுவதில் புகார் எழுந்ததை அடுத்து, அந்நிய முதலீட்டு வளர்ச்சி வாரியத்தை கலைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கரும்புக்கான ஆதார விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி குவிண்டாலுக்கு 25 ரூபாய் உயர்த்தி ரூ.225 ஆக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், அந்நிய முதலீட்டு வளர்ச்சி வாரியத்தை கலைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
ரிசர்வ் வங்கி ஒப்புதலுடன் மேற்கொள்ளப்படும், 5,000 கோடி ரூபாய் வரையிலான அன்னிய முதலீடுகளுக்கு, அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி வழங்கி வந்தது. தற்போது அன்னிய நேரடி முதலீடு தொடர்பான கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டுள்ளன. அதனால், ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி தேவையற்ற பிரிவின் கீழ் 90 சதவீத அன்னிய நேரடி முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்நிலையில் அந்நிய முதலீட்டு வளர்ச்சி வாரியத்தை கலைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அந்நிய முதலீடுகள் பெறுவதில் புகார் எழுந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக அந்நிய முதலீட்டு வளர்ச்சி வாரியம் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.