வெளிநாடுவாழ் இந்தியர்கள் பதிலி முறையில் ஓட்டு போடலாம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தங்களுக்கு பதிலாக வேறொருவர் மூலம் தேர்தலில் வாக்களிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லி: வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்தியாவில் வாக்காளர்களாக தாங்கள் பதிவு செய்துள்ள தொகுதிகளில் வேறு ஒருவர் மூலம் தங்களது வாக்குகளை பதிவு செய்யலாம் என்ற சட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் நடைபெறும் தேர்தலில் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அதிகபட்சமாக 12,000 பேர் மட்டுமே வாக்களிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் வாக்களிப்பதற்காக அவர்கள் அதிக செலவு செய்து இந்தியாவுக்கு வருவதற்கு தயாராக இல்லை என்பதும் தெரியவந்தது.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. அவர்கள் தொடர்ந்த மனுவில், வேலைவாய்ப்பு, படிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக வெளிநாடு சென்ற இந்தியர்கள் உலகம் முழுவதும் உள்ளனர்.
இந்தியாவில் தேர்தல் நடைபெறும் போது, அவர்கள் நேரில் வந்து வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை தற்போது உள்ளது. இதனால், வெளிநாடுகளில் வசிக்கும் 1.1 கோடி இந்தியர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
வெளிநாடுகளில் வசிப்போருக்கு 114 நாடுகளில் அங்கிருந்தே ஓட்டளிக்கும் உரிமையை வழங்கியுள்ளன. 20 ஆசிய நாடுகளில் இந்த வசதி உள்ளது. இந்த வசதியை இந்தியாவிலும் ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
12 பேர் குழு அறிக்கை
இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தேர்தல் துணை ஆணையர் வினோத் ஜட்ஷி தலைமையில், மத்திய சட்டத்துறை, வெளியுறவுத்துறை அதிகாரிகள் 12 பேர் அடங்கிய குழு இதுகுறித்து ஆய்வு செய்து உச்ச நீதிமன்றத்துக்கு அறிக்கை அளித்துள்ளது.
இந்த அறிக்கையில், ராணுவ வீரர்களுக்கு இருப்பதைப் போல் 'பதிலி வாக்கு' முறை அல்லது மின்னஞ்சல் மூலம் வாக்கு பதிவு செய்யும் முறையை அமல்படுத்தலாம். இதில் குறைந்த அளவு முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. இந்த வசதியை அளிக்க சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து அவர்கள் வாக்களிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டுவருமாறு மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணைய நிபுணர்கள் கடந்த 2015ஆம் ஆண்டு பரிந்துரை செய்திருந்தது.
இதையடுத்தே மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் சட்ட அமைச்சகம் கொண்டு வந்த திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
இதன் மூலம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ள இந்தியர்களும், வெளிநாடுவாழ் இந்தியர்களும் இந்தியாவில் வாக்காளர்களாக தாங்கள் பதிவு செய்துள்ள தொகுதிகளில் வேறு ஒருவர் மூலம் தங்களது வாக்குகளை பதிவு செய்யலாம் . ராணுவ வீரர்களுக்கு மட்டுமே இந்த சலுகை தற்போது வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.