நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் நகரங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: நாடுமுழுவதும் 100 ஸ்மார்ட் நகரங்கள் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், இதற்கான ஒப்புதல் தரப்பட்டிருக்கிறது.
அதி நவீன நகர்ப்புற வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் நாடு முழுவதும், 'ஸ்மார்ட் நகரங்கள்' உருவாக்கப்படும் என, பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. லோக்சபா தேர்தலில், அமோக வெற்றி பெற்று நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதும், கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், இத்திட்டம் குறித்த முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டது.இதன்படி, நாடு முழுவதும், 100 இடங்களில், ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
100 ஸ்மார்ட் நகரங்கள்
நாடு முழுவதும் ஒரு லட்சம் கோடி ரூபாயில் 2022ஆம் ஆண்டுக்குள் 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவோம் என்றார் பிரதமர் மோடி. தற்போது குஜராத் மாநிலத்தில் சபர்மதி ஆற்றங்கரையில் ஸ்மார்ட் சிட்டி உருவாகிக் கொண்டிருக்கிறது.
கிப்ட் ஸ்மார்ட் நகரம்
‘குஜராத் இன்டர்நேஷனல் பைனான்ஸ் டெக் சிட்டி' என்பதன் சுருக்கம் ‘கிப்ட்' இந்த ஸ்மார்ட் நகரத்தில் வெளிநாடுகளில் உள்ளது போல, அடிப்படை வசதிகள் மட்டுமின்றி, நவீன வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
‘கிப்ட்' ஸ்மார்ட் நகரத்தை மாதிரியாக வைத்து நாடு முழுவதும் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனிடையே இன்று கூடிய மத்திய அமைச்சரவை 100 ஸ்மார்ட் நகரங்கள் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.
பழைய குடியிருப்பு திட்டங்கள்
அதேபோல முந்தைய காங்கிரஸ் அரசின் பழைய குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் தந்திருக்கிறது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், இதற்கான ஒப்புதல் தரப்பட்டிருக்கிறது.
விவசாயிகளுக்கு ஆறுதல்
மேலும், பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தானியங்கள் கொள்முதலில் ஈரப்பதம் தொடர்பான நிபந்தனைகளையும் தளர்வு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.