சுதந்திர இந்தியாவில் மோடி ஆட்சியில் தான் அதிக பெண்கள் கேபினெட் அமைச்சர்களாக உள்ளோம்.. சுஷ்மா பேச்சு
வாரணாசி: சுதந்திர இந்தியாவில் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியில் தான் இதுவரை இல்லாத அளவு, பெண்களுக்கு கேபினெட் அந்தஸ்து அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.
வாரணாசியில் நடந்த பெண்கள் சம்மேளன கூட்டத்தில் பங்கேற்ற சுஷ்மா நாடு சுதந்திரம் அடைந்த காலம் முதல், தற்போது தான் முதல் முறையாக 6 பெண்களுக்கு கேபினெட் அமைசச்ர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
நாட்டின் முதல் பிரதமரான நேரு காலத்தில் 1952-57 ஆண்டுகளில் ராஜ்குமாரி அம்ரித் கவுர் என்ற ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டுமே கேபினெட் அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டது. அதற்கடுத்த ஆட்சி காலமான 1957- 62 ம் ஆண்டுகளில் மத்திய அமைச்சரவையில் பெண்கள் யாருமே இடம் பெறவில்லை என சுஷ்மா சுட்டிக்காட்டியுள்ளார்.
பின்னர் 1962- 64ம் ஆண்டுகளில் சுசீலா நாயர் என்ற ஒரு பெண்ணுக்கு மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டது. பின்னர் வந்த லால்பகதூர் சாஸ்திரி ஆட்சி காலத்தில் 1964- 66 ம் ஆண்டு காலகட்டத்தில் மீண்டும் சுசீலா நாயருக்கு கேபினெட் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் பின்வரும் ஆண்டுகளான 1967- 71, 1971- 77, 1980- 84 ஆகிய காலகட்டங்களில் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியில் ஒருவர் மட்டுமே பெண் அமைச்சர். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த 1984- 89 காலகட்டத்தில் மோசினா என்ற பெண்ணுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது
எரியுது வங்கம்.. டிவிட்டரில் வைரலாகும் மேற்குவங்க வன்முறை! #bengal burning
ஆனால் தற்போதைய மோடி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியில் இதுவரை இல்லாத அளவிற்கு 6 பெண்களுக்கு கேபினெட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் காபினட் அமைச்சர்கள் குழுவில் 2 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கேபினெட் அந்தஸ்து அமைச்சர் பதவியை அதிக பெண்களுக்கு வழங்கியுள்ளதன் மூலம் மோடி பெண்களை எவ்வளவு மதிக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம் என சுஷ்மா பேசியுள்ளார்.